அரசுப் பள்ளியில் வாட்டர் பெல் திட்டம்.. சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பார்கள்.. அன்பில் மகேஷ்!
சென்னை: பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த திட்டம் கேரளாவில் நடைமுறையில் உள்ள நிலையில், விரைவில் தமிழக அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்படும் என்று கூறி இருக்கிறார்.
மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் அவசியம். ஒரு மனித உடல் 55 முதல் 60 சதவிகிதம் நீரினால் ஆனது. உறுப்புகள் தேய்மானம் அடையாமல் இருக்கவும், உடலில் வெப்பநிலையை சரியாக வைத்து கொள்ளவும் நீர் அத்தியாவசியமான ஒன்றாகும். வியர்வை, சிறுநீர் கழிப்பது, மூச்சு விடுவது உள்ளிட்ட நேரங்களில் நமது உடலில் இருக்கும் நீர் வெளியேறுகிறது. இதனால் எளிதாக சோர்வு ஏற்படும்.

வாட்டர் பெல் திட்டம்
அந்த குழந்தைகள் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் நமது குழந்தைகளுக்கு ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுத்து பள்ளிக்கு அனுப்பினால், அதில் அரை பாட்டில் கூட காலியாகி இருக்காது. இதன் காரணமாகவே குழந்தைகள் பலரும் வகுப்பறையில் சோர்வுடன் காணப்படுகின்றனர். இதற்காகவே பல்வேறு மாநிலங்களிலும் வாட்டர் பெல் என்ற திட்டம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
3 முறை தண்ணீர் குடிப்பது அவசியம்
அதாவது ஒரு நாளில் காலை 10.30 மணிக்கு ஒருமுறையும், 11.45 மணிக்கு ஒருமுறையும், மதியம் 2.30 மணிக்கு ஒருமுறையும் என்று 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்படும். அந்த நேரங்களில் மாணவர்கள் கட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலமாக மாணவர்கள் சோர்வுடன் இருப்பதை தடுக்க முடியும். இந்த வாட்டர் பெல்லுக்கு 5 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்படும்.
அன்பில் மகேஷ் பேட்டி
கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் அரசுப் பள்ளிகளில் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், வாட்டர் பெல் திட்டத்தை கேரளா 2 ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறார்கள்.
விரைவில் சுற்றறிக்கை
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாய்மொழியாக கூறி வருகிறார்கள். உடல்நிலை சார்ந்து என்ன விஷயங்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறி வருகிறார்கள். குழந்தைகளின் உடல்நலத்தை காப்பதற்காக காலை உணவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் வாட்டர் பெல் திட்டத்தை செயல்படுத்த விரைவில் சுற்றறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications