போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை!

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டின் அரசுப் பேருந்துகள் தொடர்ந்து இழப்பில் இயங்கி வருவது, மாநிலத்தின் நிதிநிலையை மேலும் பலவீனப்படுத்தும் ஒரு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், அரசுப் பேருந்துகளை இயக்குவதில் ஏற்படும் பெரும் இழப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது போக்குவரத்து துறைக்குள் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

Tamil Nadu Transport Loss

ஒரு கிலோமீட்டருக்கு ரூ.53.81 நட்டம்

அரசுப் பேருந்துகளை ஒரு கிலோமீட்டர் இயக்குவதற்கு ரூ.70.61 செலவாகிறது. ஆனால் பயணச்சீட்டு மூலம் கிடைக்கும் வருமானம் வெறும் ரூ.25.97 மட்டுமே. இதனால் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் அரசுக்கு ரூ.53.81 நட்டம் ஏற்படுகிறது. செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள்தோறும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது என நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த இழப்பின் ஒரு பகுதியை, அரசு வழங்கும் டீசல் மானியம் மற்றும் மாணவர்களுக்கான பேருந்து பயணச் சலுகை மானியத்தால் ஈடு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த மானியங்கள் மட்டும் போதுமானதாக இல்லை என்று வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

7 ஆண்டுகளாக கட்டண உயர்வு இல்லை

2018ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவே இல்லை. டீசல் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், அதற்கேற்றவாறு கட்டண உயர்வு செய்யப்படாததால், போக்குவரத்து நிறுவனங்களின் இழப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே அரசுப் பேருந்து கட்டணம் மிகக் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். உதாரணமாக, விரைவுப் பேருந்துகளில் 10 கிலோமீட்டர் பயணிக்க ஆந்திராவில் ரூ.30, கேரளாவில் ரூ.20 வசூலிக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் வெறும் ரூ.12 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

போக்குவரத்து கழகங்களின் கடன் பெருக்கம்

இந்த தொடர் இழப்பு காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் கடன் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது. 2011-12ஆம் ஆண்டில் ரூ.8,761 கோடியாக இருந்த ஒட்டுமொத்த கடன், 2020-21ஆம் நிதியாண்டில் 381% உயர்ந்து ரூ.42,143.69 கோடியாக அதிகரித்தது. 2026ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ரூ.72,667 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த கடன் சுமை, போக்குவரத்து துறையின் நிதி நிலையை மட்டுமல்லாமல், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலையையும் பாதித்து வருகிறது.

முந்தைய வெள்ளை அறிக்கையின் எச்சரிக்கை

2021ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலும் இந்த பிரச்சினை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து நிறுவனங்களின் மூலதன சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், இலாபம் தரும் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்காமல் அரசே இயக்கி வருவாயை ஈட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வெள்ளை அறிக்கை, தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. கட்டண மறுசீரமைப்பு, செலவுக் கட்டுப்பாடு மற்றும் திறமையான நிர்வாகம் ஆகியவை இல்லாததால், இந்த துறை தொடர்ந்து இழப்பில் இயங்கி வருவது மாநிலத்தின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+