மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. 60-க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் பணி துவங்கும் என்றும், காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் என்னும் பணி தொடங்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் கூறியுள்ளார்.
பரபரப்புகளும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் 2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்திருக்கிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில், 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள், விவிபாட் இயந்திரக்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் என்னும் பணி தொடங்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4ம் தேதி 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 00 மணிக்குத் துவங்கும். முதலில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
தபால் வாக்கு எண்ணிக்கை
EVM பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன் துவங்கும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும்.
60 இலட்சம் அலுவலர்
இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் (ARO Level) அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த 3.60 இலட்சம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 இலட்சம் அலுவலர்கள் (80%) தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு குழு
இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் Zonal/Sectorல் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 இலட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 இலட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் (Election Duty Certificate) பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.
சேவை வாக்காளர்கள்
85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12 D விண்ணப்பத்தின் பெயரில்,
மொத்தம் 1.73 இலட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர். இதுவரை சேவை வாக்காளர்கள் (Service Voters) 18,000 நபர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை) அன்று காலை 8:00 வரை பெறப்படும். வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 இலட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன" தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications