2வது இன்னிங்ஸ்.. இந்த முறை "ஆட்டம்" வேற மாதிரி இருக்கும்.. தமிழ்நாட்டை புயல் தாக்குமா? நிலவரம் என்ன?
சென்னை: இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. ஏற்கனவே உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வலுவிழந்து உள்ளது. இதன் காரணமாக பெய்து வந்த மழை தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்து உள்ளது.
இன்னும் 2 நாட்களில் இதன் காரணமாக பெய்த மழை முடிவிற்கு வரும்.

உருவாகும்
இந்த நிலையில் இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. வரும் 09.11.2022 அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழ்நாடு நோக்கி நகரும். தற்போது குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது பின்னர் வலுவடையும். காற்றழுத்த தாழ்வு பகுதியான உருவான 48 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இன்று மழை
இதனால் இன்று தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். புதுக்கோட்டை,தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் கனமானது வரை மழை பெய்யும்.

வரும் நாட்கள்
நாளை தமிழ்நாட்டில் , விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை மறுநாள் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை,, புதுக்கோட்டை மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல்
ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருவெடுக்குமா என்று இப்போது சொல்ல முடியாது. அதற்கான நாட்கள் இன்னும் இருக்கிறது. இப்போது நிலவரப்படி இது புயலாக உருவெடுக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளன. பொதுவாக புயல் ஏற்பட வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.

புயல் வாய்ப்பு உள்ளதா?
தற்போது அங்கு வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது இன்னும் முழுமையாக உருவாக்கவில்லை. இருந்தாலும் அங்கு வெப்பநிலை 26-27 டிகிரி வரை இருப்பதால், அதே வெப்பநிலை, தாழ்வு நிலை உருவாகும் இடத்தின் மையத்திலும் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தாழ்வு நிலை பெரும்பாலும் நிலத்திற்கு அருகில் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது இலங்கை நிலப்பரப்பிற்கு அருகில் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் இவை புயலாக மாறுவது சந்தேகம்தான் என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

நிலவரம் என்ன?
இப்போதே இது புயலாக மாறுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. 2-3 நாட்கள் கழித்து வேண்டுமானால் இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்று சொல்ல முடியாது. இதன் காரணமாக சென்னையில் பெரிய அளவிற்கு மழை இருக்காது. சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மட்டுமே இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.












Click it and Unblock the Notifications