போ.. போ.. மழையெல்லாம் முடிஞ்சு போச்சு! இனி வெப்ப அலைதான்! வார்னிங் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது. இதனால், கோடை வெப்பத்திலிருந்து மக்களுக்கு ஓரளவு விடுதலை கிடைத்தது. இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் எச்சரித்துள்ளார்.
தென் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் மற்றும் வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களின் ஒரு சில பகுதிகள், காரைக்கால் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் மக்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இந்நிலையில் மழையின் தீவிரம் குறைந்து வெயில் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

தனியார் வானிலை ஆர்வலரான, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் இது குறித்து பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, "தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை முதல் வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக சென்னை 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகலாம். டெல்டா உட்பட மொத்த தமிழகத்திலும் வெயில் பட்டையை கிளப்பும். சில இடங்களில் 107 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகும்.
இன்றைய நிலவரத்தை பொறுத்த அளவில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரத்தில் மழை பெய்யும். அதேபோல மழையால் ஓரளவு குளிர்ந்திருந்த ஈரோடு உள்ளிட்ட இடங்களில் மீண்டும் வெப்பம் அதிகமாகும். குறிப்பாக ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவை எட்டும்.
சென்னையை பொறுத்தவரையில், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் 95 டிகிரி பாரன்ஹீட் அளவும், உட்புற பகுதியில் 96 டிகிரி பாரன்ஹீட் அளவிலும் வெப்பம் பதிவாகும். சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பாண்டி, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 17 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 19 மற்றும் 20ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பத்தைப் பொறுத்தவரை அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2-3 செல்சியஸ் உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 37°40' செல்சியஸ், வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34-38 செல்சியஸ் இருக்கக்கூடும். வரும் 18ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 50-60 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்" என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications