Jothimani: எதிரிக்கு எதிரி நண்பன்! எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? ஜோதிமணி நறுக் கேள்வி
சென்னை: திமுக- அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அப்படி ஒன்று நடந்தால் அதை தமிழகம் ஒரு போதும் ஏற்காது என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே!
எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை. தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.
#திமுகஅதிமுககூட்டணி. இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தவெக விஜய் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை கொடுக்காமல் அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்கும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதை திமுகவின் மூத்த நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் அரசியல் இழுபறிக்கு இடையே, அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிறகு தம்பிதுரை எம்பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. மக்கள் எங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எங்களது அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
எதையும் இப்போது சொல்ல முடியாது!
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கணக்குகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், எதையும் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது. சில விஷயங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும்," என சூசகமாகப் பதிலளித்தார்.
மீண்டும் முதல்வராக ஈபிஎஸ்?
முக்கிய அறிவிப்பாக, "மீண்டும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதிமுக தொண்டர்களும் மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்," என்று திட்டவட்டமாகக் கூறினார்.
கூட்டணி மற்றும் ஆதரவு குறித்த கேள்விக்கு இறுதிவரை பிடிகொடுக்காமல் பேசிய அவர், "யார் ஆதரவு தருவார்கள், எப்படி ஆட்சி அமையும் என்பதை இப்போதே கேட்காதீர்கள். இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள், நல்ல செய்தி வரும்," என்று கூறி விடைபெற்றார்.
அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சியை நடத்துவதாக பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஸ்டாலினும் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக 47 இடங்களைப் பிடித்துள்ளது. இந்நிலையில், தம்பிதுரையின் இந்தப் பேட்டி, அதிமுக திரைமறைவில் தீவிரமாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications