ரெஸ்டெல்லாம் கிடையாது.. 13ஆம் தேதி வரை புரட்டியெடுக்கப்படும் கனமழை! தமிழகமே இனி ஊட்டி தான்!
சென்னை: ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செ.மீ. மழையும், வால்பாறையில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அவலாஞ்சி, சோலையார், ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், சின்கோனா, தேவாலா, வால்பாறை தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பந்தலூரில் 3 செ.மீ. மழையும், கோபிச்செட்டிப்பாளையம், மேல் பவானி ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும், பெரியார், பேச்சிப்பாறை, கொள்ளிடம், வூட் பிரையர் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

வானிலை அறிவிப்பு
ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13-ம் தேதி வரை மிதமான மழை
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் லேசான மழை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.

மேக மூட்டம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications