தமிழில் சொன்ன அந்த ஒரேயொரு வரி.. திமுவை சீண்டிய பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல்! பின்னணி
சென்னை: லோக்சபாவில் மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாவை காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோற்கடித்தன. இந்நிலையில் தான் தமிழக பாஜகவின் மேலிட தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஒற்றை வரியில் தமிழில் பதிவு போட்டு திமுகவை சீண்டி உள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டுக்கான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026, மாநிலங்களுக்கான தொகுதி மறுவரையறை மசோதா 2026 (Delimitation Bill 2026) யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவற்றை லோக்சபாவில் இன்று எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன.

இந்த மசோதாக்களை நிறைவேற்ற 3ல் 2பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால் ஆனால் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லை. எதிர்க்கட்சிகளும் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால் மசோதா தோற்கடிக்கப்பட்டது.
3 மசோதாக்களும் தோல்வி
மசோதா மீதான வாக்கெடுப்பில் 489 எம்பிக்கள் பங்கேற்றனர். மசோதாவுக்கு ஆதரவாக 278 பேர் வாக்களித்தனர். எதிராக 211 பேர் வாக்களித்தனர். மசோதா நிறைவேற்ற 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் லோக்சபாவில் மசோதா தோல்வியடைந்தது. 3 மசோதாக்களும் நிறைவேறவில்லை. இதையடுத்து காங்கிரஸ், திமுக உள்பட பிற எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி கட்சிகள் உள்ளதாக சாடி வருகின்றன.
தமிழக பாஜக போட்ட பதிவு
இந்நிலையில் தான் தமிழ்நாடு பாஜக சார்பில் திமுக தலைவர் என்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக காட்டமாக பதிவு ஒன்று போடப்பட்டு இருந்தது. அதில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரின் படத்துடன் போட்டோ பதிவிடப்பட்டுள்ளது. 'இந்தியா' கூட்டணியில் பெண்களுக்கான இடதுக்கீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. பெண்களின் முதுகில் திமுக குத்திவிட்டதாக எழுதப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அந்த பதிவில், ''ஒட்டுமொத்த பெண்களும் தற்போது வெறுக்கும் ஒரே நபர் நீங்கள் தான் ஸ்டாலின். பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை சட்டப்பூர்வமாக்கும் மத்திய அரசின் "மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா" வை திட்டமிட்டே தடுத்து நிறுத்தி மாபெரும் வரலாற்று பிழையை செய்து விட்டீர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்களை மறைக்க, பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கத் துணிந்த உங்களைப் போன்ற பிற்போக்குவாதியை முதல்வராக பெற்றதற்கு தமிழகமே இன்று வெட்கித் தலைகுனிகிறது.
ஸ்டாலினுக்கு மன்னிப்பே கிடையாது
பெண்கள் பொருளாதார ரீதியாகவோ அல்லது அதிகாரமிக்க பொறுப்புகளிலோ முன்னேறினால் "ஆணாதிக்க" அறிவாலயத்திற்கு கை கால்கள் நடுங்கி வியர்த்து விடும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக திமுக வாய் கிழிய பேசி வந்த பெண்ணியமும், பெண்கள் முன்னேற்றமும் வெறும் காற்றுப் போன பலூன்களாக இன்று தூள் தூளாக சிதறி கிடக்கின்றன.
அதுசரி சொந்த குடும்பத்திற்குள் இருக்கும் பெண் வாரிசுகளையே அரசியலில் முன்னேற விடாமல் தொலை தூரத்திற்கு துரத்தும் உங்கள் கோபலபுர குடும்பம், எங்கள் குடும்பப் பெண்களை மட்டும் முன்னேற விடுமா என்ன? . ஆண்கள் மட்டுமே ஆள வேண்டும், ஆண்கள் மட்டுமே அதிகாரத்தில் அமர வேண்டும், ஆண்களுக்கு மட்டுமே சுயமரியாதை உண்டு, ஆண்களுக்கு மட்டுமே மதிப்பும் மரியாதையும் உண்டு என்று நினைக்கும் நீங்களும் உங்கள் கட்சியினரும் தமிழகத்தின் சாபக்கேடு! தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரதப் பெண்களுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்த உங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது ஸ்டாலின்'' என கூறியிருந்தனர்.
பியூஷ் கோயல் சொன்ன வார்த்தை
இந்த பதிவை தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், ''தமிழ்நாடு வாக்குச்சீட்டின் வாயிலாக தனது பதிலைத் தெரிவிக்கும்! Tamil Nadu will reply through the ballot!'' என கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி இந்த விவகாரத்தை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெண்கள் மத்தியில் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழக பெண்கள் தங்களின் வாக்குரிமை வாயிலாக திமுகவுக்கு பதிலளிப்பார்கள் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாார்.












Click it and Unblock the Notifications