முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்- தமிழகம், தெலுங்கானா ஆளுநர்கள், வைரமுத்து இரங்கல்!
சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான அவ்வை நடராஜன் (வயது 85) ( அவ்வை நடராசன்) சென்னையில் இன்று காலமானார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தமிழறிஞர் ஒளவை துரைசாமி- லோகாம்பாள் ஆகியோருக்கு மகனாக 1936-ம் ஆண்டு பிறந்தவர் அவ்வை நடராஜன். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஆய்வுகள் மூலம் முனைவர் பட்டம் பெற்றார்.

பேராசிரியர் பணி
மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். டெல்லியில் அகில இந்திய வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் பணிகளை ஏற்றார்.

அரசு பணி
1975-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநராக பணியாற்றினார். 1984-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமல் அரசு துறை செயலராக முதன் முதலில் நியமிக்கப்பட்டவர் அவ்வை நடராஜன்.

துணைவேந்தர்
1992-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார் 2014-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 2015-ம் ஆண்டு முதல் சென்னை பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பதவி வகித்தார். சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த அவ்வை நடராஜன், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

வைரமுத்து இரங்கல்
அவ்வை நடராஜன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து மற்றும் தமிழறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்:
அய்யகோ!
அறிஞர் அவ்வை நடராசன்
மறைந்தாரே!
தமிழ்ச்சங்கத்தின்
ஏடொன்று எரிந்துபட்டதே
அகிலம் தழுவி வீசிய
தமிழ்த்தென்றல்
தன் வீச்சையும் மூச்சையும்
நிறுத்திவிட்டதே
பட்டிமன்றம்
பொட்டிழந்துவிட்டதே
இனி என்னோடு
தனித்தமிழில் உரையாட
எவருளார்?
பேசுதமிழ் உள்ளவரை
உங்கள் பெருமை
வாழும் பெருமை!

தமிழகம், தெலுங்கானா ஆளுநர்கள் இரங்கல்
தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா- புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்: ன்னித் தமிழால் ஒளவையை முன்னிறுத்தி ....
ஔவைக்குள் இருந்த கன்னித்தமிழை உலகறியச் செய்தவர் மதிப்பிற்குரிய திரு.அவ்வை நடராஜன் அவர்கள்.... அவரது இழப்பு தமிழுக்கு பேரிழப்பாகும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications