நம்ம ஊரு சூப்பரு, நம்ம ஸ்கூல்.. தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழுக்கு எப்போது இடம்? தமிழார்வலர்கள் வேதனை
சென்னை: தமிழகத்தில் ஆளும் 'திராவிட மாடல' அரசின் திட்டங்கள் நம்ம ஊரு சூப்பரு, நம்ம ஸ்கூல் என பிறமொழி கலப்புடன் இருப்பது தமிழார்வலர்களை வேதனைப்பட வைத்துள்ளது.
தமிழக அரசு நம்ம ஊரு சூப்பரு என்ற பெயரில் கிராமப்புறங்களிலும் சுகாதார மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வுத் திட்டத்தை அண்மையில் செயல்படுத்தியது. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நம்ம ஊரு சூப்பரு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டம் குறித்து தமிழக அரசு தரப்பில் கூறுகையில், ஊரக பகுதிகளில் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பு மக்கள் இயக்கம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தின்போது துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை மற்றும் நெகிழி கழிவுமேலாண்மை, ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கிராமப்புற மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்திட முதல்வர் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டது.

நம்ம ஊரு சூப்பர் இயக்கம், மத்திய அரசின் தூய்மையே சேவை இயக்கத்தோடு இணைந்து செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 - வரை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டது. நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் மூலம் குப்பைகள் அதிகம் சேகரமாகியிருந்த 47,399 இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. 21,775 பள்ளிகள், 22,695 அங்கன்வாடி மையங்கள், 45,824 அரசு கட்டிடங்கள், 70,011 சமுதாய சுகாதார வளாகங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி 47,949 நீர் நிலைகள், 1,569 கீ.மீ அளவிலான கழிவுநீர் வடிகால்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இவ்வியக்கத்தின் ஒரு பகுதியாக பசுமைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு 4.36 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நம்ம ஊரு சூப்பரு" இயக்கத்தின் காரணமாக ஊராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் மூலம் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் தமிழகத்தின் கிராமப்புற சுகாதாரம் சிறப்பாக உள்ளது என Swachh Survekshan Grameen-2022 கணக்கெடுப்பின்படி அங்கீகரிக்கப்பட்டு தேசிய அளவில் தமிழகம் "மூன்றாம் இடம்" பெற்று குடியரசுத் தலைவரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்றது தமிழக அரசு.

ஆனால் அப்போதே அது என்ன நம்ம ஊரு சூப்பரு, ஏன் நம்ம ஊரு நல்ல ஊரு என வைக்கக் கூடாதா? என தமிழார்வலர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ்ப் பெரியசாமி கூறுகையில், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதற்கு வழிவகுக்கும் தமிழ் ஆட்சி மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் நம்ம ஊரு சூப்பரு என ஒரு திட்டத்துக்கு பெயர் சூட்டியிருப்பது அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஊரு நல்ல ஊரு என்று இருந்தால் மக்கள் மறுக்கப் போவது இல்லை என சுட்டிக்காட்டி இருந்தார்.
தற்போது நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற ஒரு திட்டத்தை தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து தேவையான வசதிகளை செய்து கொடுக்க நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திலும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என ஆங்கிலம் கலந்து பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி தொடர்ச்சியாக தமிழக அரசின் திட்டங்களுக்கு ஆங்கிலம் கலந்து பெயர் வைப்பதை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழங்கும் திராவிட மாடல் அரசு எப்படி அனுமதிக்கிறது? என்பது தமிழார்வலர்கள் கேள்வி.
தேனி வையைத் தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த புலவர் புலவர் ச.ந.இளங்குமரன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், தமிழ் தமிழ் என்று முழங்கியே தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, இந்தியை எதிர் நின்று களமாடி தமிழ் வளர்த்த தலைவர்கள் வழியில் ஆள்வதாய்ச் சொல்லும் தமிழக அரசு ஆங்கிலத்தை வலிந்து திணித்தல் முறை தானோ? தமிழ் வளர்க்க தமிழ் வளர்ச்சித் துறை என ஒன்றை நிறுவி, அதன்மூலம் வணிக நிறுவனங்களுக்குத் தமிழில் பெயர் பெயர் வைக்க ஆணையும் போட்டு, பள்ளி மாணவ மாணவியரின் தலைப்பு எழுத்து தமிழில் தான் இருக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டு, அரசு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்" என தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து தமிங்கிலமாய் உலா வருவது தான் தமிழக அரசின் செயலோ? அல்லது தமிழர்களை தமிங்கிலர்களாய் மாற்றுவது தான் தமிழ்நாடு அரசின் பணியோ? மேற்சொன்ன யாவும் கண்துடைப்போ? தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளுவது எந்த விதத்தில் சரி? தமிழக அரசியலார் சிந்திக்கவேண்டும். "நம்ம பள்ளி பவுண்டேசன்" என்னும் தமிங்கிலத்தை மாற்றவேண்டும். "நம்ம பள்ளி" நம்ம பள்ளி அறத்தளம்" என நற்றமிழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுகிறோம் என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications