"டார்கெட்".. திமுக தந்த முக்கியமான டாஸ்க்..கச்சிதமாக முடித்த வேல்முருகன்.. எவ்வளவு மாற்றம் பாருங்க!
சென்னை: பண்ருட்டியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.. திமுக கொடுத்த சில முக்கியமான டாஸ்க்குகளை வடதமிழகத்தில் கச்சிதமாக செய்து வருகிறார்!
அரசியல் ரீதியாக எப்போதும் கொதிப்பாக இருக்கும் வடதமிழகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சத்தமே இன்றி மேஜிக் ஒன்றை நிகழ்த்தி வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலின் போது வேல்முருகனுக்கு திமுக ஒரு முக்கிய "அசைன்மென்ட்" கொடுத்து இருந்தது.
அதை வெற்றிகரமாக முடித்த வேல்முருகன் தற்போது அதே உதயசூரியன் சின்னத்தில் திமுக சார்பாக பண்ருட்டி தொகுதியில் களமிறங்கி உள்ளார். வடதமிழகத்தில் தற்போது வேல்முருகன் செய்து வரும் தேர்தல் பணிகள்.. அப்பகுதியின் பல்லாண்டு கால அரசியல் வரலாற்றை கொஞ்சம் கொஞ்சமாக திசை மாற்ற தொடங்கி உள்ளது. வேல்முருகனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் குறித்து பார்க்கும் முன்.. வடதமிழகம் குறித்து ஒரு குட்டி ஸ்டோரி!

வடதமிழகம்
தமிழக சட்டசபை தேர்தல் என்று வந்தாலே வடதமிழகம் தனி கவனம் பெறும். இங்கு இருக்கும் வன்னியர் ஜாதி வாக்குகளும், தலித் ஜாதி வாக்குகளும் யாருக்கு செல்கிறது என்பதை பொறுத்த தேர்தல் முடிவுகள் இருக்கும். வடதமிழகத்தில் பாமக வலிமையாக இருப்பதற்கும், பாமகவின் வாக்கு வங்கி தொடர்ந்து சரியாமல் நிலையாக இருப்பதற்கும் இந்த வடதமிழக அரசியலே காரணம்.

விசிக
இங்கு இருக்கும் தலித் மக்களும் கணிசமான வாக்கு வங்கியை கொண்டு உள்ளனர். விசிக கட்சி வடதமிழகத்தில் பல தொகுதிகளில் மிகவும் வலிமையாக இருக்கிறது. வடதமிழகம் என்றாலே விசிக vs பாமக என்ற நிலை நீடிப்பதற்கும், இரண்டு கட்சிக்கும் தொடர்ந்து மோதல் நிலவி வருவதற்கும் இந்த வாக்கு வங்கி பின்புலமும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.. இங்குதான்.. வேல்முருகன் தனது மேஜிக்கை நிகழ்த்துகிறார்.. இங்குதான் அவர் புதிய வியூகத்தை புகுத்துகிறார்.

வேல்முருகன்
வன்னியர் வாக்கு வங்கி, தலித் வாக்கு வங்கி என்று பிரிந்து கிடக்கும் வடதமிழகத்தை வேல்முருகன் ஒன்று சேர்க்கும் வேலைகளை செய்து வருகிறார். லோக்சபா தேர்தல் நேரத்திலேயே திமுகவிற்காக இந்த பணிகளைத்தான் செய்தார். பாமகவிற்கு எதிராக வன்னியர் வாக்குகளை திருப்பி, வடதமிழகத்தில் போட்டியிட்ட திமுக , விசிக வேட்பாளர்களை வெற்றிபெற வைத்தார்.

வெற்றி
பாமகவில் ஒரு காலத்தில் முக்கியமான தலைவராக இருந்த வேல்முருகனுக்கு பெரிய அளவில் வன்னியர்கள் ஆதரவு இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி , பாமகவுக்கு எதிராக ஒரு பக்கம் வன்னியர் வாக்குகளை வேல்முருகன் திருப்பி வருகிறார். வடதமிழகத்தில் லோக்சபா தேர்தலில் திமுக ஆதிக்கம் செலுத்த இவர் முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் வேல்முருகன் நிகழ்த்தும் உண்மையான மேஜிக்கே.. அவருக்கு இருக்கும் தலித் ஆதரவுதான்.

ஆதரவு
வடதமிழகத்தில் இருக்கும் தலித் மக்கள்..வேல்முருகனுக்கு எந்த வேறுபாடும் பார்க்காமல் ஆதரவு அளித்து வருகிறார்கள். விசிக தலைவர் எம்பி திருமாவளவனுடன் இவர் நெருக்கம் காட்டுவது , ஒன்றாக மேடையில் தோன்றுவது என்று தலித் மக்களின் ஆதரவை தன் பக்கம் திருப்பி இருக்கிறார். இவர்கள்தான் எனக்கு தேர்தல் பணிகளை செய்கிறார்கள் .. விசிக உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்று வேல்முருகனே விசிகவினரை உருக்கமாக பாராட்டி கண்ணீர்விட்டு உள்ளார்.

எப்படி?
கடந்த இரண்டு வாரங்களில் வேல்முருகன் நிகழ்த்திய சில மேஜிக்குகள்,
வடதமிழ்கத்தில் வேல்முருகனுக்காக வன்னியர்கள் - தலித்துகள் பலர் ஒன்றாக வாக்கு சேகரிக்கிறார்கள். பல வருடம் பின் இப்படி நடக்கிறது.
வேல்முருகனின் ஆதரவாளர்கள் விசிகவினர் போட்டியிடும் தொகுதியில் உதவிக்கு நிற்கிறார்கள். இதனால் வன்னியர்கள் இருக்கும் பகுதியில் பிரச்சனையே இல்லாமல் விசிக தேர்தல் பணிகளை செய்கிறது.
சில நாட்களுக்கு முன் சில வடதமிழக தொகுதிகளில் வன்னியர்களின் பகுதிகளில் விசிகவின் பிரச்சாரத்தின் போது சில மோதல்கள் ஏற்பட்டன. இதை பெரிதாக்க விடாமல் வேல்முருகன் தரப்பு உள்ளே புகுந்து சமாதானம் செய்து உள்ளனர். வன்னியர் - தலித் ஒற்றுமை இங்கு கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியமாகி வருகிறது .

மாற்றம்
தலித் வாக்கு, வன்னியர் வாக்கு என்று இரண்டு தரப்பையும் கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு பின் வேல்முருகன் ஒன்றாக கொண்டு வரும் பணிகளை செய்து வருகிறார் . திமுக எதிர்பார்த்தது இதைத்தான். திமுக இவருக்கு கொடுத்த டாஸ்க்கும் இதுதான் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். கச்சிதமாக இந்த பணியை வேல்முருகன் கடந்த சில வாரங்களாக வடதமிழகத்தில் செய்து வருகிறார் என்று வடதமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படிங்க .. ஸ்கூலுக்கு போங்க., சாதி சண்டையை விடுங்க என்று இவர் வெளிப்படையாக பேசுவது.. வடதமிழக அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும்..

திமுக
வேல்முருகனுக்கும் திருமாவளவனுக்கு இருக்கும் சமீபத்திய நெருக்கம் வடதமிழக அரசியல் பாதையை திருப்ப தொடங்கி உள்ளது . கண்டிப்பாக திமுகவிற்கு இது சாதகமாக செல்லும் . வன்னியர் உள் இடஒதுக்கீடு மூலம் வடதமிழகத்தில் பாமக ஏற்கனவே ஸ்கோர் செய்துவிட்டது. பாமகவை சமாளிக்க திமுக பயன்படுத்தும் ஒரே அஸ்திரம் வேல்முருகனாக இருக்கிறார்... இவர் எந்தஅளவிற்கு வடதமிழகத்தில் கேம் சேஞ்சராக இருப்பார் என்பது தேர்தல் முடிந்த பின்பே தெரியும்!












Click it and Unblock the Notifications