அமைந்தகரையில் தவெக கொடி கம்பம்.. சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோவில் தெருவில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சரத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், திருவீதி அம்மன் கோவில் தெருவின் மூலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த கொடிக்கம்பங்களால் எந்த இடையூறும் இல்லை என்றும், அந்த பகுதியில் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக்கு விண்ணப்பித்தும், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சி கொடிக்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர் என்பதால், கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சத்திய நாராயண பிரசாத், மீண்டும் இரண்டு வாரங்களில் மாநகராட்சியிடம் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். அந்த விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
கொடி கம்பம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை:
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்திருந்த உத்தரவு விவாதங்களை கிளப்பியிருந்தது.
அதாவது, பொது இடங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் மதம், சாதி சம்பந்தமான அமைப்புகள் கொடிக்கம்பங்களை வைப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறு, விபத்து ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகின்றன. சில அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவிலான உயரங்களிலும் கட்சி கொடிக்கம்பங்களை அமைக்கின்றன. இது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி கீழ்கண்ட உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் அனைத்து கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். தவறினால் அரசே அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். எதிர்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு வருவாய்த்துறையினர் அனுமதிக்கக் கூடாது. பட்டா இடங்களில் கொடி கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் நேரங்களில் கட்சி கொடிகள் வைப்பதற்கு உரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் அனுமதி வழங்கலாம். அவ்வாறு அனுமதி வழங்கும்பட்சத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதிமொழியையும், வைப்புத் தொகை மற்றும் வாடகை தொகையும் வசூல் செய்திருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உடனடியாக அனுப்பி அதை செயல்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் உறுதிப்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் மதம், சாதி சம்பந்தமான அமைப்புகள் கொடிக்கம்பங்களை வைப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறு, விபத்து ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உருவாகின்றன. சில அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவிலான உயரங்களிலும் கட்சி கொடிக்கம்பங்களை அமைக்கின்றன. இது ஏற்கத்தக்கதல்ல" என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications