ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது.. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஒரேபோடு!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே பிரதான இலக்கு என்று கூறியுள்ள அவர், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றிபெற்றார். அவர் 2023ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

அந்த இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி மட்டுமே நேரடியாக போட்டியிடவுள்ளது. அந்த கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் தரப்பில், கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு.
அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications