அறிக்கைதான் அரசியல்ன்னு.. யாரோ நம்ப வச்சு இருக்காங்க போல.. மீண்டும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்!
சென்னை: இளைஞர் அஜித் குமார் மரண விவகாரத்தில்.. ஒரு நல்ல அரசியல் கட்சியாக.. ஒரு மக்கள் பக்கம் நிற்கும் கட்சியாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வாய்ப்பை விஜய் தவறவிட்டுள்ளார். ஒரு மரணத்தில் அரசியல் செய்வது என்பது தவறானது. ஆனால் ஒரு மரணத்தில், அதுவும் போலீசே ஏற்படுத்தும் ஒரு கொலையில், அரசியலுக்கு நெருக்கடி கொடுப்பதும், மக்கள் பக்கம் நின்று நீதி வாங்க போராடுவதும் எதிர்க்கட்சிகளின் கடமை.
எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள், கேள்விகள், நேரடி அழுத்தங்கள்தான் ஒரு ஜனநாயம் சரியாக இருக்கிறது என்பதற்கு உதாரணம். ஆளும் கட்சி எவ்வளவு நல்ல கட்சியாக இருந்தாலும்.. அவர்களை கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் அவசியம். அப்படி ஒரு எதிர்கட்சியாக தன்னை முன்னிறுத்தும் வாய்ப்பை மீண்டும் இழந்து உள்ளார் விஜய்.

நேரடியாக முதல்வர் ஆகும் கனவோடு களமிறங்கி இருக்கும் விஜய் இளைஞர் அஜித் குமார் விவகாரத்தில் மீண்டும் வெறும் அறிக்கையோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.
விஜய் அறிக்கை அரசியல்
விஜய் தனது அறிக்கையில், திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்!
அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும்.
இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.
அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன், என்றுள்ளார்.
விஜய் வொர்க் ஃப்ரம் ஹோம்
விஜய் இப்படி அறிக்கை அரசியல் செய்வது முதல்முறை அல்ல. கட்சி தொடங்கியதில் இருந்தே இதை மட்டும்தான் செய்கிறார். அப்போதாவது ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்த பின் வருவார் என்றார்கள். ஆனால் ஹூட்டிங் முடிந்த 1 மாதத்திற்கு மேல் ஆகியும் விஜய் வெளியே தலைகாட்டவில்லை.
1. சிவகங்கை இளைஞர் அஜித் குமார் மரண விவகாரத்தில் விஜய் தரப்பு நேரடியாக வழக்கு தொடுத்திருக்கலாம். அதை செய்யவில்லை.
2. விஜய் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்திருக்கலாம் . செய்யவில்லை.
3. குறைந்தபட்சம் போனில் பேசி இருக்கலாம் . செய்யவில்லை.
4. திமுக மீது வைக்க வேண்டிய முறையான விமர்சனங்களை செய்தியாளர்களை கூட்டி வைத்திருக்கலாம். கேள்விகளை எழுப்பி இருக்கலாம். செய்யவில்லை.
5. சரி ஒரு விமர்சனம் வீடியோ போட்டு இருக்கலாம். செய்யவில்லை.
இவர் மனசுக்குள் யாரோ ஆழமாக போய் இவரை டாக்டர்ன்னு நம்ப வச்சு இருக்காங்க போல என்று சொல்வது போலத்தான்.. அறிக்கைதான் அரசியல்ன்னு.. யாரோ நம்ப வச்சு இருக்காங்க போல என்று சொல்லும் அளவிற்கு விஜய் மீண்டும் அறிக்கையோடு தனது எதிர்ப்பை முடித்துக்கொண்டு விட்டார்.












Click it and Unblock the Notifications