பார்த்துட்டே இருங்க.. இன்று திரிபுரா.. நாளை தமிழ்நாடு.. தமிழிசை அதிரடி!
சென்னை: திரிபுராவில் ஏற்பட்ட வெற்றிக் கதை நாளை தமிழகத்திலும் பிரதிபலிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சத்தம் போடாமல் ஒரு மாபெரும் யுத்தத்தை பாஜக முன்னெடுத்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக குறி வைத்து தூக்கிக் கொண்டுள்ளது. எங்கெல்லாம் பாஜக அமைதியாக இருக்கிறதோ அங்கெல்லாம் படு தீவிரமான திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
அந்த வகையில் தமிழகத்திலும் பாஜக படு தீவிரமாக முஸ்தீபுகளை செய்து கொண்டுள்ளது. இன்று தமிழிசை போட்டுள்ள ஒரு டிவீட்டும் அந்த முஸ்தீபுகளை சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
Tirupura success story is great role model for team work done systematically will bring victory @BJP4TamilNadu will follow your path under visionary @PMOIndia @ AmitShah @JPNadda @blsanthosh ji guidance https://t.co/KCNXQoOigW
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 2, 2019
தமிழிசை போட்டுள்ள அந்த டிவீட்டில், ஒரு குழுவாக வேலை செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு திரிபுராவின் வெற்றிக் கதையே மிகப் பெரிய சாட்சி. இந்த வெற்றி நாளை தமிழகத்திலும் எதிரொலிக்கும். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார் தமிழிசை.
சொன்னதோடு நிற்கவில்லை. புள்ளி விவரத்தையும் அவர் அடுக்கியுள்ளார். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 6111 இடங்களில் பாஜக 5916 இடங்களை வென்றுள்ளதாம். அதேபோல 419பஞ்சாயத்து சமிதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்தது 411 ஆம். ஜில்லா பரிஷத் தேர்தலில் மொத்தம் உள்ள 116 இடங்களில் 114 இடங்களை பாஜக அள்ளி விட்டதாம்.
நாளை இதே போல தமிழகத்திலும் நடக்கும் என்று தமிழிசை கூறியுள்ளார். நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.