இதே பினராயி விஜயன் ஐயப்பனுக்கு இருமுடி கட்டும் காலம் வரும்.. கருப்பு என்பது ஆன்மிகமாகும்.. தமிழிசை
சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஐயப்பனுக்கு இருமுடி கட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது பாஜக மூத்த தலைவர் சுரேந்திரன் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அது போல் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு சில கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டன கூட்டம் நடந்தது. ஐயப்பா பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு பேசினார்.

தீர்ப்பு
அப்போது அவர் பேசுகையில் பயபக்தியுடன் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க விடாமல் கேரள அரசு திருப்பி அனுப்புகிறது. ஆனால் பக்தியே இல்லாது கோர்ட் கொடுத்த தீர்ப்புக்காக வேண்டுமென்றே சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

நெருக்கடி
திருப்பி அனுப்ப வேண்டியது பக்தர்களை அல்ல. பினராயி விஜயனைத்தான். அதை மக்கள் விரைவில் செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கேரள அரசு ஒரு நெருக்கடியான நிலையை ஐயப்ப பக்தர்களுக்கு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

பல மடங்கு அதிகமாகும்
கம்யூனிஸ்ட் கட்சி தன் கடைசி அத்தியாயத்தை எழுதுகிறது. தமிழகத்திலிருந்து ஒரு கோடி பேர் சபரிமலைக்கு செல்கிறார்கள். ஐயப்பனை பார்ப்பதற்கு தடை நீடிக்க பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாகும்.

இருமுடி கட்டுதல்
மேலும் கோடிக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதே பினராயி விஜயனும் இருமுடி கட்டிக் கொண்டு ஐயப்பனை தரிசிக்கும் காலம் வரத்தான் போகிறது.
கறுப்பு என்பது ஆன்மிகம் என எல்லோருக்கும் உணர்த்தப்படும் காலமும் விரைவில் வரும். ஆன்மிக ஆட்சி தென் மாநிலங்களில் வர வேண்டும் என்பதே ஐயப்பன் நமக்கு உணர்த்துகிறார். அது நிச்சயம் நிறைவேறும் என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications