159 வேட்புமனுக்கள் வாபஸ்.. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 159 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் தொடங்கும் என்று பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 15ஆம் தேதி வெளியாகியது. தொடர்ந்து மார்ச் 30ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையடுத்து ஏப்ரல் 6ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தமாக 234 தொகுதிகளிலும் சேர்த்து 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் ஏப்ரல் 7ஆம் தேதியன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில் 5,072 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. முறையாக பூர்த்தி செய்யப்படாத 2,464 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதிலும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியில் தவெக வேட்பாளர் அருண்குமார் வேட்புமனு மற்றும் அவருக்கு மாற்றாக வேட்புமனு தாக்கல் செய்த தவெக நிர்வாகியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டன.
இதன் காரணமாக 233 தொகுதிகளில் மட்டுமே தவெக போட்டியிடும் நிலை உருவாகி இருக்கிறது. அதேபோல் நேற்று வரை 70க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டன. மாலை 3 மணியுடன் வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இந்த நிலவரப்படி 159 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதன்பின் தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதையடுத்து இன்று மாலையே சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து நாளை முதல் அந்தந்த தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் தொடங்கும். தொடர்ந்து பயிற்சிக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொன்றிலும் 16 வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள்.
வேட்பாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் இயந்திரங்கள் சேர்க்கப்படும். அதிகபட்சமாக 4 அலகுகளை சேர்க்க முடியும். அவற்றில் இருந்து 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பட்டன் இடம்பெறும். அதேபோல் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்கவுள்ளன. இதற்கான பயிற்சி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல் நாளை முதல் பூத் ஸ்லிப் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications