பெரியாரை எதிர்த்தவர் பிடிஆரின் தாத்தா! திமுகவை இழுத்து விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை
சென்னை: திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த லக்ஷ்மணன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த அமைச்சர் பிடிஆர் சென்றிருந்த போது, அவரது காரில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்தும் வேறு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தமிழக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
எங்களுக்கு வேணாம்! பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு! கிராமசபையில் 200 பேர் தீர்மான கையெழுத்து!

நாடக அரசியல்
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள கூறுகையில், "நாடக அரசியலின் அடுத்த காட்சி நாட்டுப்பற்றா? மூவண்ணக் கொடியைப் போற்றுவோம் என்ற முதல்வரின் பசப்பு அறிக்கையைப் படிக்க நேர்ந்தது. தங்கள் நாடக அரசியலின் அடுத்த தேசபக்தி ஸ்டிக்கர் ஒட்டும் காட்சியை நானும், தமிழக மக்களும் அறிந்துகொண்டோம். இறையாண்மை மிக்க இந்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைத்துக்கொண்டு உங்களின் தரத்தையும் தராதரத்தையும் வெளிப்படுத்தி வரும் நீங்கள், இந்தியாவின் பன்முகத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பற்றி, கவலைப்படும் தங்கள் திடீர் தேசபக்தி நகைப்புக்கு இடமாக உள்ளது.

திராவிட நாடு
தமிழ் கூறும் நல்லுலகிற்கு தங்கள் தகுதி நன்றாகத் தெரியும். தாங்கள் தேசியத்தை வெறுப்பவர்கள். போலி திராவிடத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள். எப்போதெல்லாம் உங்களுக்கு எதிர்ப்பு வலுக்கிறதோ!... அப்போதெல்லாம் உங்கள் தனி திராவிட நாடு கோரிக்கையைக் கையில் எடுப்பீர்கள். மாநில முதல்வராகிய உங்கள் முன்னால் உங்கள் கட்சியின் 2ஜி ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஒருவர் தேவைப்பட்டால் தனி திராவிட நாடு கோரிக்கையைக் கையில் எடுப்போம் என்று பேசியபோது அவரைக் கண்டிக்காமல், புன்முறுவலுடன் ரசித்த உங்கள் நாட்டுப்பற்றும், உங்கள் தேசிய பற்றும் தெளிவாக அனைவருக்கும் புரியும்.

நிதி அமைச்சரின் தாத்தா
நீதிக்கட்சியின் பெயரைச் சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்த போது, திராவிடம் என்ற பெயரை எதிர்த்து, அதைத் தமிழர் கழகம் என்று அறிவிக்க வேண்டும் என்று, தங்கள் நிதி அமைச்சரின் தாத்தா மதுரை சர், பி. டி. ராஜன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம், மணப்பாறை திருமலைசாமி, பி. பாலசுப்பிரமணியன், போன்ற பல தலைவர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்றுத் தேசியத்திற்குப் பெருகிவரும் ஆதரவைக் கண்டவுடன், தங்களுக்குத் தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது. அதனால் சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாகக் கொண்டாட விடாமல், உங்கள் அடக்குமுறை அரசியலை வெளிப்படுத்துகிறீர்கள்.

செருப்பு வீச்சு சம்பவம்
மறைந்த வீரர் லக்ஷ்மணன் திமுகவுக்குக்காக்கப் போராடி உயிரிழக்கவில்லை... இந்த நாட்டுக்காகப் போராடி வீர மரணம் எய்தி இருக்கிறார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. இதில் மலிவான அரசியல் செய்தவர் யார்? என்பதை தமிழ்நாடறியும். உங்கள் அமைச்சரின் காரின் மீது, செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை நான் நியாயப்படுத்தவும் இல்லை. அதை ஆதரிக்கவுமில்லை. ஆனால் சிந்தனை இல்லாத தங்கள் ஆட்சிக்குக் கிடைத்த சிந்த்ரெல்லா பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.

திமுக மீது தாக்கு
50 ஆண்டு காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த நீங்கள், அதாவது தங்கள் கட்சி, இதுவரை எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குச் சிலை வைத்திருக்கிறீர்கள். இதுவரை எத்தனை முறை தாங்கள் வஉசி பெயரை உச்சரித்திருக்கின்றீர்கள்? வீரன் அழகுமுத்துக்கோன் பெயரைச் சொல்லி இருக்கிறீர்களா? மருது சகோதரர்கள், கொடிகாத்த குமரன், வீர மங்கை வேலுநாச்சியார், கடலூர் அஞ்சலையம்மாள் இப்படிப்பட்டவர்கள் பற்றிப் பேசி இருக்கிறீர்களா?

தேசியம் தெய்வீகம்
தேசியக்கவி என்று இந்தியத் தேசமே போற்றிய முண்டாசுக்கவிஞர் பாரதியை, அவரின் சீடரான பாரதிதாசனாரை கொண்டாடியது போல இல்லாமல், தங்கள் ஆட்சிக் காலங்களில் பாரதியைத் தமிழகத்தில் பேச மறந்தது ஏன்? தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகப் போற்றிப் பாதுகாத்த முத்துராமலிங்கத் தேவர் ஐயா, அவர்களின் பெயரை மட்டும் ஓட்டுக்காக மட்டும் தாங்கள் உச்சரிப்பது உண்டு. மற்றபடி அவர் மேல் உண்மையான மரியாதை இல்லாமல், அவர் நினைவிடத்தில் பிரசாதமாக வழங்கப்பட்ட திருநீரை தரையில் வீசி அவமானப்படுத்துவீர்கள். இதுவா தேவர் அய்யா போற்றிய தேசியம், கடைப்பிடித்த தெய்வீகம்.

அஞ்சப் போவது இல்லை
முதல்வரின் அறிக்கையில் மூட அரசியல் தனத்தை சட்டப்படி அடக்குவோம் என்று முழங்கி இருக்கின்றீர்கள். உங்கள் அடக்குமுறையைக் கண்டு நாங்கள் யாரும் அஞ்சப்போவதில்லை. நாட்டின் இறையாண்மைக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிராக எவர் புறப்பட்டாலும், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க, பாஜகவின் ஒவ்வொரு தொண்டனும் தயாராக இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் பின்னாலும், நானும், என் மூத்த தலைவர்களும் இருக்கிறோம் என்ற உண்மையை தயவுசெய்து மறந்துவிட வேண்டாம் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.