அக்காவுக்கு 5-வது இடம்-அண்ணாமலைக்கு 10-வது இடம்..வானதி சீனிவாசன் போட்டோவால் பாஜகவில் வெடித்த சர்ச்சை
சென்னை: தமிழ்நாடு பாஜக வட்டாரங்களில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பகிர்ந்த போட்டோ புதிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனி பாணியில் செயல்பட்டு வருகிறார். அதேநேரத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சீனியர்கள் தங்களது பாதையில் செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் பயணிப்பதும் சீனியர்கள் புறக்கணிக்கப்படுவதும் வெட்ட வெளிச்சமான ஒன்றுதான்.

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் போது வானதி சீனிவாசன், சிபிஆர் போன்ற சீனியர்கள் பந்த் போராட்டம் அறிவித்தனர். ஆனால் மாநில தலைவர் அண்ணாமலையோ சோனியர்களுக்கு நோஸ் கட் தரும் வகையில் மாநில தலைமையை கேட்காமலேயே அறிவித்துவிட்டனர் என ஜகா வாங்கினார்.

அண்மையில் கூட அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக அண்ணாமலை பேசியதாக வெளியான பேச்சு இன்னமும் சர்ச்சையாகவே நீடிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்பது அண்ணாமலை பேசியதாக வெளியான செய்தி. இதனை வானதி சீனிவாசன் உள்ளிட்ட சீனியர்கள் கடுமையாக எதிர்த்தனர் எனவும் கூறப்பட்டது. பின்னர் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அமித்ஷா கூறியதை புரிந்து கொள்ள இந்தி தெரிய வேண்டும் என கிண்டலடித்தார் அண்ணாமலை

இந்நிலையில் கர்நாடகா மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். தேர்தலில் சீட் யாருக்க் கொடுக்கப்பட வேண்டும் என்ற விவகாரத்தில் அண்ணாமலை மீது கர்நாடகா பாஜக சீனியர்களும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து டெல்லி ஆலோசனைக் கூட்டத்துக்கு அண்ணாமலையும் அழைக்கப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். ஒரு மாநில தலைவராக இருந்தும் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்த போது அவரை வரவேற்க டெல்லி மேலிடம் அனுமதிக்கவில்லை; இதற்கு காரணமே அவரது குழப்பமான கருத்துகளை டெல்லி அங்கீகரிப்பதாகிவிடும் எனவும் கூறப்பட்டது.

டெல்லியில் பாஜகவின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட படத்தை முன்வைத்து இப்போது பாஜகவில் சர்ச்சை வெடித்திருக்கிறது. டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் தாம் பங்கேற்ற படத்தை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தமது ஃபேஸ்புக் பக்கத்தில்
"இன்று மாலை புது தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜீ, தேசியத் தலைவர் திரு. நட்டா ஜி மற்றும் தேசியத் தலைவர்கள் பங்கேற்ற மத்திய தேர்தல் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்." என்ற வரிகளுடன் பகிர்ந்துள்ளார்.

அப்படத்தில் ஒருவரிசையில் வானதி சீனிவாசன், எதிர் வரிசையில் அண்ணாமலை அமர்ந்திருக்கின்றனர். அமித்ஷாவுக்கு அடுத்ததாக 4-வது இடத்தில் வானதி சீனிவாசன் அமர்ந்திருக்கிறார். எதிர் வரிசையில் ராஜ்நாத்சிங்குக்கு அடுத்ததாக 10-வது இடத்தில் அண்ணாமலை அமர்ந்திருக்கிறார்.
வானதி சீனிவாசன் இப்படத்தை பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பக்கத்தில் Ravi Mallaya என்ற நெட்டிசன், "அண்ணாமலையை விட நான் பெரிய ஆளுனு சொல்லாம சொல்றதுக்காக இந்த பதிவு" என எழுதியுள்ளார். Suresh Suresh என்பவரோ, உங்களை முதலில் கட்சியில் இருந்து துரத்தி விட வேண்டும் அப்போது தான் தமிழ்நாடு பாஜக வில் உங்களை போன்ற கருப்பு ஆடுகளை களை எடுக்க முடியும் என கொந்தளித்துள்ளார்.

Karuppasamy Karuppasamy என்பவர், நமஸ்கார் ஜி மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜி அவர்களுடைய பெயரும் தங்களுடைய வரிகளில் இடம் பெற்றிருக்க வேண்டும் ஜி என ஆதங்கப்பட்டிருக்கிறார். ஆனால் Venk At என்பவர், அவசியமில்லை சகோதரரே.
அப்புறம், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெயரும் இடம் பெற்று இருக்க வேண்டும், மூத்த தலைவர் BS எடியூரப்பா பெயரும் இடம்பெற்று இருக்க வேன்டும், டாக்டர் அருணா பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும்... இப்படி எல்லாம் ஆளாளுக்கு சொல்லலாம். ஆனால் அவர்களும் அவரவர் பதிவில் யார் பெயரை குறிப்பிட்டார்கள்? யார் பெயரை குறிப்பிடவில்லை என்பதை பார்த்துவிட்டு நீங்கள் கமெண்ட் செய்யலாமே என பதில் தந்துள்ளார்.
·
Murugesan Muthusamy என்ற பாஜக ஆதரவாளர்,மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டோம் என்று எழுத தங்களை தடுப்பது எது மேடம் பதவி வரும் போது பணிவு வர வேண்டும் அது தங்களை மேன்மேலும் உயர்த்தும் என கொட்டித் தீர்த்துள்ளார். Vinoth Kumar Bhagavathi Appan என்பவர், இன்று மாலை புது தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜீ, தேசியத் தலைவர் திரு. நட்டா ஜி தமிழக தலைவரும் கர்நாடக தேர்தல் துணை பொறுப்பாளர் தலைவர் திரு அண்ணாமலை ஜீ மற்றும் தேசியத் தலைவர்கள் பங்கேற்ற மத்திய தேர்தல் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். உங்களுடைய பதிவு இப்படி வந்து இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.ஆனால் உங்கள் பதிவில் வயிற்றெரிச்சல் மற்றுமே தெரிகிறது என எழுதியுள்ளார். இப்படியாக வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆதரவாளர்களிடையே புதிய மோதல் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications