'இது முழுக்க முழுக்க அரசு பயணம்.. கொடி, பதாகைகளை தவிர்க்க வேண்டும்'.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை: சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் மு க ஸ்டாலின் நாளை ஆய்வு செய்யவுள்ள நிலையில், கட்சி தொண்டர்கள் தன்னை வரவேற்க கட்சி கொடிகளைக் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் 300ஐ தாண்டியுள்ளது.
இதன் காரணமாக மாநிலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கிற்குப் பிறகு சென்னையில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.
அதிகரித்த கொரோனா.. நாளை முதல், மாவட்டங்களுக்கு நேரடியாக விசிட் செய்யும் ஸ்டாலின்
முதல்வர் ஆய்வு
அதேநேரம் ஈரோடு, மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், சேலம், திருப்பூர். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை முதல்வர் மு க ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆய்வு செய்கிறார்.
அரசு பயணம்
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் கழக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன். எனவே, கழகத்தினர் நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, 'ஒன்றிணைவோம் வா' பணிகளில் ஈடுபட்டு மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தர வேண்டும்.
பதாகைகள் வேண்டாம்
இந்தப் பயணத்தின் போது அல்லது நான் தங்கும் இடங்களில் என்னைச் சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனக்கு வரவேற்புக் கொடுக்கும் எண்ணத்தில் பயணம் செய்யும் பகுதிகளில் கட்சி கொடிகளைக் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
ஸ்டாலின் அறிக்கை
கட்சி தொண்டர்களாகிய உங்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் ஊக்கத்தைத் தரும் என்றாலும், இந்தத் தருணத்தில் உங்கள் நலனும் - பொதுமக்கள் அனைவரின் நலனும் எனக்கு மிகவும் முக்கியம் என்பதால் என்னுடைய இந்த அன்பு வேண்டுகோளைக் கட்சியினர் தவறாது கடைப்பிடித்திட வேண்டுகிறேன்" எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.