Do and Die- செய்துவிட்டு செத்துமடி.. பழமொழியை மாற்றிப்போட்ட முதல்வர் ஸ்டாலின்.. அனல் பறக்கும் பேச்சு
சென்னை: அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், Do or Die என்ற பழமொழியை Do and Die என்று எடுத்துக் கொள்வேன் என்றும் செய்துவிட்டே செத்துமடி என்று நான் சொல்வேன் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை மாதவரத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அரசு ஊழியர்கள்தான் அரசு என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அவர்கள் இல்லை என்றால் அரசே இல்லை என்றும் தெரிவித்தார்.

Do and Die
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன். செயலில் நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும். ஒரு அடுக்குமொழி உண்டு, பேச்சைக் குறைத்து நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும். ஆங்கிலத்திலே ஒரு வார்த்தை உண்டு. 'Do or die' அதாவது 'செய் அல்லது செத்து மடி' ஆனால் அதைக்கூட வார்த்தையைக் கொஞ்சம் திருத்தம் செய்து சொல்லவேண்டும் என்று சொன்னால் என்னைப் பொருத்த வரையிலே, அது Do and Die. செய்து முடித்துவிட்டுத் தான் சாகவேண்டும் என்ற உணர்வோடு நான் என்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதைத் துவக்கத்திலேயே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம்
அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம்.. அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை என்பதைச் சொல்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். திமுக ஆட்சி இருக்கும்போது அரசு ஊழியர்களுடைய பொற்கால ஆட்சியாக எப்போதும் அமைந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் அமையும் என்று சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். இப்போது மட்டுமல்ல, எப்போதும், கழக ஆட்சி அமைந்தபோதெல்லாம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களது முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம் என்பதை நானும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள்.

படிப்படியாக
மக்களாட்சித் தத்துவத்தில் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்கக்கூடிய அரசு ஊழியர்களின் நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு நிச்சயமாக படிப்படியாக ஆனால் அதே நேரத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று நான் தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறேன். அந்த உரிமையுடனும் தகுதியுடனும் தான் நான் இந்த மாநாட்டுக்கு வருகை தந்துள்ளேன்.

உங்களில் ஒருவன்
நான் உங்களில் ஒருவன். அதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் நான் இந்த மாநாட்டிற்குத் தேடி வந்திருக்கிறேன். நீங்கள் அரசு ஊழியர்கள். நான் மக்கள் ஊழியன். அதுதான் வித்தியாசம். எனவே, உங்கள் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை நான் உணர்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன். அரசாங்கம் இப்போது உள்ள நிலைமையை நீங்கள் உணர்ந்தாக வேண்டும், ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று நான் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கேட்காமலேயே நிறைவேறும்
கடந்த பத்தாண்டுக்காலமாகத் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சீரழித்தும் - சூறையாடியதுமான ஒரு ஆட்சி நடந்தது. நான் அரசியல் பேச விரும்பவில்லை. இருக்கக்கூடிய எதார்த்தைத்தான் சொல்கிறேன். அதை நான் உங்களிடம்தான் கூற முடியும். வேறு யாரிடமும் கூறமுடியாது. இந்தக் கடந்த காலத் தவறுகளில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் பணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். தமிழ்நாட்டின் நிதி நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக, உறுதியாக இருக்கிறது. அப்போது உங்களது அனைத்துக் கோரிக்கைகளையும் நீங்கள் கேட்காமலேயே, இது போன்ற மாநாடுகளையெல்லாம் போட்டு என்னை அழைத்து வந்து இந்த உறுதியை கேட்காமலேயே அந்த கோரிக்கையை நிச்சயமாக இந்த அரசு நிறைவேற்றித் தரும். ஆகவே நான் இருக்கிறேன், நீங்கள் இதைப்பற்றி சிறிதளவும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

கொத்தடிமை
'கொத்தடிமை போன்ற நிலை அகலட்டும்' என்று அன்பரசு எழுதி இருக்கிறார்கள். நிதி நிலைமையைப் பொறுத்தவரை ஒன்றிய அரசிடம் கொத்தடிமை முறையைப் போலக் கையேந்தும் நிலைமையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன. ஜி.எஸ்.டி., முதல் வெள்ள நிவாரண நிதி வரைக்கும் நமக்குத் தரவேண்டிய நிதிகளே முழுமையாகத் தரப்படுவது இல்லை. தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை. கொத்தடிமைகளைப் போல் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் தான் மாநில அரசுகள் உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications