பட்டியலின மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்... தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டன அறிக்கை!
Recommended Video
சென்னை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேதகர் சிலையை சில விஷமிகள் சிதைத்திருப்பதை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவல்துறையினரின் அலட்சியப்போக்கே சிலையை உடைக்கும் அளவுக்கு வேதாரண்யத்தில் விபரீதம் ஏற்படக் காரணம் எனக் கூறியுள்ளார்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசுக்கு கண்டனம்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரத்தில், பட்டியலின மக்கள் தங்களுக்கு தனி மயானம் ஒதுக்கக் கோரி பல ஆண்டுகள் அதிகாரிகளிடம் முறையிட்டும் இது வரை அது நிறைவேற்றித்தரப்படவில்லை என குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
மேலும், பட்டியலினத்தை சேர்ந்த குப்பன் என்பவர் உடலை கடந்த வாரம் பாலாற்றில் கயிறு கட்டி இறக்கி தகனம் செய்த சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக அழகிரி கூறியுள்ளார். இப்பிரச்சனையில் முதலமைச்சரே, மாவட்ட அமைச்சரோ தலையிட்டு நியாயம் வழங்கவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளாததற்கு கண்டனத்தை பதிவு செய்வதாக சாடியுள்ளார். பட்டியலின மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்
சாதிய கொடுமைகள் தமிழகத்தில் நடைபெறாத வகையில் தமிழக ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்திருகிறார்.