ராஜினாமா செய்யக்கூடாதுன்னு சொன்னது ஓகே.. ஆனா எப்படி கட்சி விவகாரத்த விமர்சிக்கலாம்? தமிழக காங்கிரஸ்!
Recommended Video
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதவி விலகக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் குறித்து ரஜினி விமர்சித்தது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்ற பிறகு காங்கிரஸ் சந்திக்கும் இரண்டாவது பெரி தோல்வி இது.
இதற்கு ராகுலின் தலைமையே காரணம் என பேச்சு எழுந்தது. கட்சியின் வடமாநில நிர்வாகிகளும் இந்த விமர்சனத்தை முன்வைத்ததாக தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த்.. ஆஹா அரிய வாய்ப்பு.. அவசரமாக பரிசீலிப்பாரா ராகுல் காந்தி?
ராகுல் ராஜினாமா
இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் ராஜினாமா கடிதம் அளித்தார் ராகுல்காந்தி. ஆனால் அதனை ஏற்க காங்கிரஸ் காரியக் கமிட்டி மறுத்துவிட்டது.
ரஜினியிடம் கேள்வி
ஆனால் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியே தீருவேன் என பிடிவாதமாக உள்ளார் ராகுல்காந்தி. இந்நிலையில் சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிக்காந்திடம் ராகுலின் பதவி விலகல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ராகுல் நிரூபிக்க வேண்டும்
அதற்கு பதிலளித்த ரஜினி, ராகுல் நிச்சயமாக பதவி விலகக்கூடாது. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியை போல் எதிர்க்கட்சியும் முக்கியமானது. ராகுலுக்கு தலைமைப் பண்பு இல்லை என்பதை ஏற்கமுடியாது. கட்சியில் உள்ள மூத்த தலைவர்களை கையாள்வது ராகுலுக்கு சவாலாக உள்ளது என்ற கூறிய ரஜினி, ராகுல் நின்று நிரூபித்துக்காட்ட வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மகிழ்ச்சி
இந்நிலையில் ரஜினியின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது என்று கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.
உற்று நோக்கப்படுகிறது
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி என்று கூறியதை ஏற்க முடியாது. மேலும் காங்கிரஸ் உட்கட்சி விவகாரம் குறித்து ரஜினிகாந்த் விமர்சிப்பது தவறு. இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்தார். அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினி அறிவித்துள்ள நிலையில் அவரது ஒவ்வொரு பிரஸ்மீட்டும் பேச்சும் பெரிதும் உற்று நோக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.