மின்னல் வேகம்! தமிழகத்தில் மீண்டும் 50,000 கடந்த ஆக்டிவ் கேஸ்கள்.. சென்னையில் நிலைமை மிக மோசம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் ஆக்டிவ் கேஸ்கள் பல வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது இரவு மற்றும் ஞாயிறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை ஊரடங்கு குறித்த ஆலோசனை நடைபெறும் நிலையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேக்சின் பணிகள் காரணமாக உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றாலும் கூட தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்தே வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
நேற்று தமிழகத்தில் 10,978 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று அதைவிடக் கூடுதலாக 1917 பேருக்கு அதாவது 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மொத்தம் 1.48 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 12,895 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 34 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 18 பேரும் அடக்கம். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆக்டிவ் கேஸ்களின எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று 40,260 இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 51,335ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பின்னர் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,808 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 27,12,096 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மொத்தம் 12 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகச் சென்னையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,855 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
தலைநகர் சென்னையில் நிலை தான் மிக மோசமாக உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்பில் கிட்டதட்ட சரிபாதி சென்னையில் தான் உள்ளது. தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 6186 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டில் 1512 பேருக்கும் திருவள்ளூரில் 702 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 7.9 உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 15.5ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 14ஆகவும் திருவள்ளூரில் 12.8ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது. அதேபோல ராணிப்பேட்டை (12.5), கிருஷ்ணகிரி (10), தூத்துக்குடி (10.9) ஆகிய மாவட்டங்களிலும் பாசிட்டிவ் விகிதம் மோசமாக உள்ளது..












Click it and Unblock the Notifications