ஒரு மாதத்திற்குப் பின் 10,000க்கு கீழ் வந்த தினசரி பாதிப்பு.. பாசிட்டிவ் ரேட்டும் 10க்கு கீழ் குறைவு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் சூழலில், இன்றைய தினம் வைரஸ் பாதிப்பு 9,916ஆகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் ஓமிக்ரான் காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி பாதிப்பு 2ஆம் அலையை விட அதிகமாகச் சென்றது.
இருப்பினும், அதிகப்படியான நபர்களுக்கு வேக்சின் போடப்பட்டிருந்ததால் குறைவான நபர்களுக்குத் தீவிர கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

தினசரி பாதிப்பு
அதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த ஜன. 22ஆம் தேதி தினசரி வைரஸ் பாதிப்பு 30,700ஐ தாண்டிய நிலையில், அதன் பின்னர் மளமளவெனக் குறைந்தே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1.27 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 5 பேர் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 11 பேர் உட்பட மொத்தம் 9,916 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் சுமார் 28 நாட்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது. முன்னதாக கடந்த ஜன. 7ஆம் தேதி 8,981 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. தமிழகத்தில் இதுவரை 33,97,238 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாசிட்டிவ் விகிதம் மீண்டும் 10க்கு கீழ் குறைந்துள்ளது. இப்போது மாநிலத்தின் பாசிட்டிவ் விகிதம் 9.2ஆக உள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 7.7%ஆகக் குறைந்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல மாநிலத்தில் ஆக்டிவ் கொரோனா கேஸ்களும் மின்னல் வேகத்தில் குறைந்து வருகிறது. நேற்று 1,66,878 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 1,55,329ஆக குறைந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 21,435 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,04,213ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில்30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 19 தனியார் மருத்துவமனைகளிலும் 11 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாகச் சென்னையில் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கோவையில் 4 பேரும் திண்டுக்கல் மற்றும் மதுரையில் தலா 3 பேரும் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 37,696 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் கூட, மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் தான் மோசமாக உள்ளது. தலைநகரில் ஒரே நாளில் 1475 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கோவையில் தினசரி பாதிப்பு 1224ஆக உள்ளது. இந்த 2 மாவட்டங்களில் மட்டுமே தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications