Tamilnadu curfew.. தமிழகத்தில் ஊரடங்கின் போது எதற்கு அனுமதி? எதற்கு தடை? தமிழக அரசு அறிவிப்பு என்ன
சென்னை: ஒமிக்ரான் பரவலுக்குப் பின்னர் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அறிவுறுத்தியுள்ளது,
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 9 ஆயிரத்தை நெருங்குகிறது. நிலைமையை கையைவிட்டுப் போவதைத் தடுக்க மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பல்வேறு மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இரவு ஊரடங்கு
இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் 10 மணி முதல் காலை 5 மணி வரை வணிக வளாகங்கள் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதற்கு முன்பு தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்தும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

எதற்கு அனுமதி
அதேநேரம் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

பொது போக்குவரத்து
அதேபோல 50% பயணிகளுடன் பொது போக்குவரத்து சேவை (பஸ், மெட்ரோ) தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், வெப்ப நிலையைப் பரிசோதனை உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் 2 டோஸ் வேக்சின் போட்டிருப்பதைப் போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதி செய்ய வேண்டும்.

ஐடி நிறுவனம்
மேலும், உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்குச் செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் ஐடி நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு ஐடி நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஞாயிறு ஊரடங்கு
வரும் ஜன.9ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் பொதுப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது. மேலும் முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

பயணிகள்
9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு இன்று போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி, கல்லூரி
9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. மாணவர் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது. மேலும், அனைத்து கோச்சிங் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

வழிபாட்டுத்தலங்கள்
பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பாதிப்பு வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படும் நிலையில், பொங்கல் விழாவுக்குப் பின் ஊரடங்கு விதிகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications