தமிழகத்தில் இன்று 2458 பேருக்கு மட்டுமே கொரோனா.. ஆனால் சில நாட்களாக மீண்டும் உயரும் உயிரிழப்புகள்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2458 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 55 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக மாநிலத்தில் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கொரோன பரவல் காரணமாக வரும் ஜூலை 19ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் கடந்த 53 நாட்களாக வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 54ஆவது நாளாகவும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று 12 வயதுக்கு உட்பட்ட 116 சிறார்கள் உட்பட மொத்தம் 2,458 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் வட மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களாகும். இன்று மாநிலத்தில் 1.46 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும்கூட கடந்த சில நாட்களாக மாநிலத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 12ஆம் தேதி 36 பேரும், நேற்று 48 பேரும் கொரோனாவால் பலியாகியிருந்தனர். இந்நிலையில், இன்று கொரோனா உயிரிழப்பு மேலும் உயர்ந்துள்ளது. இன்று மாநிலத்தில் மொத்தம் 55 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 16 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 39 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும்.

ஆக்டிவ் கேஸ்கள்
மேலும் இன்று உயிரிழந்தவர்களில் 20 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள். அதேபோல 13 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். இதுவரை ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் 33,557 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் 30,600 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன அதேபோல இன்று மட்டும் 3,021 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை 24,62,244 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
கடந்த சில வாரங்களைப் போலவே இன்றும் மாநிலத்திலேயே கோவையில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கோவையில் இன்று 270 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 175 பேருக்கும், தஞ்சையில் 171 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிரச் சென்னை (153), செங்கல்பட்டு (131), சேலம் (164), திருப்பூர் (146) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.












Click it and Unblock the Notifications