வார்னிங்.! சென்னையில் மீண்டும் 200 கடந்த வைரஸ் பரவல்.. இந்த 13 மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் கொரோனா
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1908 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை (203 பேர்) உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நேற்றைய வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 68 நாட்களாகத் தொடர்ந்து குறைந்த வந்த வைரஸ் பாதிப்பு, கடந்த ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 1 வரை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை அறிவித்தன.
இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!
அதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கூடுதல் தளர்வுகளின்றி வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மட்டும் சுமார் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 3 பேர் உட்பட மொத்தம் 1908 பேருக்கு இன்று மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 122 பேர் 12 வயதுக்கு உட்பட சிறார்கள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 25,65,452 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்த வரை இன்று மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 23 பேர் என மொத்தம் 29 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 7 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள் ஆகும். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் இதுவரை 34,159 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் நேற்று 20,385 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அது 20,217ஆக மேலும் குறைந்துள்ளது. இன்று மட்டும் மாநிலத்தில் 2,047 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 25,11,076 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். பாசிட்டிவ் விகிதம் இன்றும் தஞ்சை மாவட்டத்திலேயே அதிகமாக உள்ளது. தஞ்சையில் இன்று 3.5% ஆக பாசிட்டிவ் விகிதம் உள்ள நிலையில், அரியலூர் (2.1%), கோவை (2.1%), ஈரோடு (2.0%) மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 2ஐ கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.3% ஆகவே தொடர்கிறது.
மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பு மீண்டும் 200ஐ கடந்துள்ளது. நேற்று அங்கு 189 பேருக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று வைரஸ் பாதிப்பு 203ஆக உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 208 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு (181), செங்கல்பட்டு (122), தஞ்சை (118) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.
13 மாவட்டங்களில் உயரும் கொரோனா
நேற்றைய வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில் சென்னை, ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாகத் திருப்பூரில் 5 பேரும், கோவை மற்றும் சேலத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.