ஷாக்..! சென்னை, கோவை என இரு மாவட்டங்களில் 200ஐ கடந்த வைரஸ் பாதிப்பு.. மீண்டும் உயரும் கொரோனா
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் இன்று அதிகரித்துள்ளது. இன்று மாநிலத்தில் மொத்தம் 1591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது முதலே மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கும் பின்னர் தளர்வுகளுடன் கூடி ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது.
தற்போது மாநிலத்தில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி இறுதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகள் காரணமாக இதுவரை வைரஸ் பாதிப்பு பெரியளவில் அதிகரிக்கவில்லை, கட்டுக்குள்ளேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
திடீர் பரபரப்பு.. 1-10 வயது குழந்தைகளை பாதிக்கும் கொரோனா... வார்னிங் தந்த நிபுணர்கள்
தினசரி கொரோனா பாதிப்பு
கடந்த இரண்டு நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்த வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1591 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மாநிலத்தில் இன்று 1,52,296 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 91 சிறார்கள் உட்பட மொத்தம் 1591 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 26,37,010 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 1 ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.9%ஆக பாசிட்டிவ் விகிதம் உள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இன்று சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 27 உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் ஒருவர் எவ்வித இணை நோயும் இல்லாத 4 பேரும் பேர் 50 வயதுக்குக் குறைவான 3 பேரும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகக் கோவையில் 5 பேரும் சேலத்தில் மூன்று பேரும் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 35,217 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் நேற்றைக் காட்டிலும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஆக்டிவ் கேஸ்கள் 16,522ஆக இருந்த நிலையில், இன்று அது 16,549ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,537 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 25,85,244 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வாரியான பாதிப்பில் இன்று சென்னையில் தான் அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 212 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 201 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் 116 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும் தஞ்சையில் 119 பேருக்கும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.