அடுத்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்? சத்தமில்லாமல் நடவடிக்கைகளை தொடங்கிய கட்சிகள்.. பரபர தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் மிக விரைவாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது தொடர்பாகக் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2017லேயே நடத்தப்பட்டிருக்க வேண்டிய ஊரக உள்ளாட்சித் தேர்தல் பல ஆண்டுகள் தாமதமாக 2019இல் நடைபெற்றது. அப்போதும்கூட புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை.
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
இதில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மோசமான தோல்வியைச் சந்தித்து. வெறும் 6 மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர்களான தேர்தலில் வெறும் ஒற்றை இலக்கிலேயே வென்று இருந்தது. ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 100க்கும் குறைவான இடங்களிலேயே மட்டுமே அதிமுகவால் வெல்ல முடிந்தது. தனித்துக் களமிறங்கிய பாமகவுக்கும் பெரியளவில் வெல்ல முடியவில்லை.

திமுக
இதில் மொத்தம் 140 இடங்களைக் கொண்ட மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களை தன்வசப்படுத்தியது. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் 1021 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான் இது என திமுக தரப்பில் கூறப்படுகிறது. இதே வேகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான் ஆளும் தரப்பின் திட்டம்.

என்ன காரணம்
இதை அப்படியே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அறுவடை செய்ய வேண்டும் என்றும் ஆளும் தரப்பு விரும்புகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் சொத்து வரி உள்ளிட்ட சில வரிகள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். இதற்காகக் கடந்த டிச. மாதமே தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது ஆளும் தரப்பு.

கொரோனா பரவல்
இதனால் மிக விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதற்குள் ஓமிக்ரான் பரவலால் மின்னல் வேகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மேலும் தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அந்த தகவுகளை புறம்தள்ளும் வகையில் வாக்காளர் பட்டியலை வெளியிடுவது, மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் ஒதுக்கீடு என தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது.

ஒரே கட்டமாக தேர்தல்?
குறிப்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட தமிழ்நாட்டில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தவிர இதர கட்சிகள் அனைத்தும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றே வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கூட எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தே ஆலோசிக்கப்பட்டது.

எப்போது
மேலும், கொரோனா பாதிப்பும் பிப்ரவரி மாதம் குறையலாம் எனச் சென்னை ஐஐடி ஆய்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இதனால் பிப்ரவரி பிற்பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் தேர்தல் தொடர்பான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

பணிகள் தீவிரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மிக விரைவில் நடைபெறும் என்பதால் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளும் விருப்ப மனுக்களை வாங்கும் பணிகளை முடித்துவிட்டன. அதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியான உடன் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கும்












Click it and Unblock the Notifications