ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ரகம்.. மோடிக்கு தந்த ரிப்ளை.. ஆரம்பமே அடித்து தூக்கும் ஸ்டாலின்.. சரவெடி!
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று டிவிட்டரில் அளித்த பதில்கள் அதிக கவனம் ஈர்த்துள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு ஸ்டாலின் நன்றி சொன்ன விதம் கவனம் ஈர்த்து இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கிறது. தனிப்பெரும்பான்மையோடு திமுக ஆட்சிக்கு வருகிறது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் தனியாக 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நேற்று அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு தெரிவித்த வாழ்த்தில், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாம் இனி இணைந்து பணியாற்ற வேண்டும்.

முன்னேற்றம்
தேசிய முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும், பிராந்திய தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும் நாம் செயல்பட வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ஸ்டாலின் சொன்ன பதில்தான் தற்போது வைரலாகி வருகிறது. தனது பதிலில் ஸ்டாலின் பயன்படுத்திய வார்த்தைகள்தான் கவனம் ஈர்த்துள்ளது.

மாநில உரிமை
ஸ்டாலின் தனது பதிலில் பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி, மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஐக்கிய அரசுடன் இணைந்து பணியாற்றுவேன். கூட்டாட்சி ஆதரவுடன், நாம் இந்த கொரோனாவை கடந்து வருவோம் என்று ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ஸ்டாலின் தனது பதிலில் நேற்று Central Government என்று கூறாமல் Union Government என்று குறிப்பிட்டதும், Federal போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதும் கவனம் ஈர்த்துள்ளது.

கூட்டாட்சி
மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில், இது பல கூட்டாட்சி கொண்ட ஐக்கிய நாடு என்பதை நினைவு கூறும் வகையில் ஸ்டாலின் மிகவும் கவனமாக தனது பதில்களை பதிவு செய்தார். ஸ்டாலினின் இந்த ரிப்ளை வடஇந்திய டிவிட்டர் பயனாளர்கள் இடையே வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியிடம் மட்டுமின்றி மற்ற அரசியல் தலைவர்களுக்கும் ஸ்டாலின் இப்படித்தான் பதில் அளித்தார்.

பலருக்கு பதில்
உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன், மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவார் என்று பல்வேறு தலைவர்களிடம் நன்றி சொன்ன தனது பதிலில் பயன்படுத்திய வார்த்தைகள்,
சமூக நீதி இயக்கம், மதச்சார்பற்ற மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி, சம உரிமை, சுயாட்சி தத்துவம், மாநில உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சியின் மதிப்புகளை மீண்டும் உயர்த்துதல், மொழியியல் சமத்துவம், பிராந்திய அடையாளம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழக முதல்வர் ஒருவர் மீண்டும் பிராந்திய தத்துவங்களையும், மாநில உரிமைகளையும் பற்றி பேசுகிறார்.

கவனம் ஈர்த்தது
தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் இவரின் இந்த பதில்கள் கவனம் ஈர்த்துள்ளது. ஒவ்வொரு வார்த்தையையும் மிக கவனமாக பயன்படுத்தி, தரமாக ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ஆரம்பமே மாநில உரிமை, சுயாட்சி தத்துவம், மொழி உரிமை என்று ஸ்டாலின் சரவெடி பதில்களை அளித்து வருகிறார். திமுகவினர் இடையே ஸ்டாலினின் இந்த எழுச்சி பெரிய அளவில் நம்பிக்கைகளை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications