ரூ5 கோடி.. தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மீது அதிரவைக்கும் புகார்- நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புகார்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி. வேலுமணி, பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை ஆட்சய பாத்திரம் என்ற திட்டமாக அதிமுக ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது என கூறினார். இதற்கு பதிலளித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: ஆளுநர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு செலவுகள் குறித்து மாற்றங்கள் வந்தது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 2018-19 ஆண்டு வரை ரூ.50 லட்சம் பணம் discretionary fund ஆக ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் 2019ம் ஆண்டுக்கு பிறகு திடீரென்று 50 லட்சத்தில் இருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தி தனிப்பட்ட அதிகாரம் Discretionary power என்ற பிரிவில் ரூ. 5 கோடியாக மாற்றப்பட்டுள்ளது. அந்த கணக்கு குறித்து ஆய்வு செய்ததில், ரூ. 5 கோடி பணத்தில் ரூ.4 கோடி அட்சய பாத்திரம் திட்டத்துக்கு தனியார் அமைப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வழங்கிய உணவு சத்துணவு கூட இல்லை. அரசு இடத்தை வைத்து, அரசு பணத்தை வைத்து, பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக பணத்தை எடுத்து கொடுத்துள்ளனர். மேலும் மீதமுள்ள ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆளுநர் மாளிகையின் கண்ணுக்கு தெரியாத கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

மீண்டும் அடுத்த ஆண்டு ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடி ரூபாய் தான் அட்சய பாத்திர திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 4 கோடி வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டது. பிறகு அத்திட்டமே நின்று போனது. ஆளுநர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தலைப்பில் பணத்தை கொடுத்துள்ளனர். இந்த பணம் ஏதோ கட்சி நடத்துவதற்காக செலவு செய்யப்பட்டதா என்று அச்சம் வருகிறது.அதோடு, திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்த நிதி ஆண்டின் இறுதியில் மற்ற கணக்கிற்கு மாற்றுவது சரியல்ல என சி.ஏ.ஜி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இதுபோல நடந்துள்ளது. ரூ. 5 கோடி எந்த காரணம் இல்லாமல், யாருக்கும் சொல்லாமல் மறைமுகமாக கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜனநாயக மரபுக்கு நல்லது கிடையாது. இது நல்ல திட்டமே இல்லை.ரூ.500க்கும் ரூ.1000க்கும் மானிய கோரிக்கையில் சட்டப்பேரவையில் நாம் ஒப்புதல் பெற்று வருகிறோம். ஆனால் ரூ. 5 கோடி யாருக்கும் சொல்லாமல் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது அரசியலமைப்புக்கு உட்பட்டது தானா?. இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications