பிரதமரிடம் நிதி கேட்கவில்லை.. தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவுதான் கேட்டோம்.. அமைச்சர் பொன்முடி!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தான் பிரதமர் நரேந்திர மோடியிடம் நிதியுதவி கேட்கவில்லை. தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளியுங்கள் என்று பேசியதாக அண்ணாமலைக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி, தமிழக அரசின் உயர்க்கல்வி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அண்ணாமலை அறிக்கை
இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கல்வி தரத்தை உயர்த்தவும் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமகிர சிக்ஷா நிதி மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.6,664 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. 1800 களின் தொடக்க காலத்திலேயே திராவிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் வருவதற்கு முன், தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் கல்வி பயின்று வந்துள்ளனர்.
ஆனால் இன்றோ தமிழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்ற உண்மையை அமைச்சர் மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம். தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்று தெரிவித்தார்.

பொன்முடி பதில்
இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், திராவிடம் என்ற வார்த்தையின் வரலாறு குறித்து திமுகவின் டி.ஆர்.பாலு, அசிரியர் கி.வீரமணி உட்பட ஏராளமானோர் பதில் அளித்துவிட்டனர். இதுவெல்லாம் அவருக்கு புரியாத விஷயம். உயர்கல்வித்துறை அமைச்சராக பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக அரசின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மட்டும்தான் கோரிக்கை வைத்தேன். நிதியுதவி செய்யுங்கள் என்று கேட்கவில்லை.

தமிழக அரசு நடவடிக்கை
ஏனென்றால் தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டேன். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி குறித்தும் பேசினேன். கல்வியின் தரத்தை உயர்த்த எடுத்து வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டேன்.

பள்ளிக்குள் நுழைய விட்டார்களா?
எண்ணிக்கை முக்கியமல்ல என்கிறார். அந்த காலத்தில் கிராமத்தில் இருந்து படித்தவர்களின் எண்ணிக்கையையும் கொடுக்க வேண்டும். அந்தக் காலம் என்பது ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று இருந்த காலம். அடிதட்டு மக்களை பள்ளிக்குள் நுழைய விட்டார்களா? என்று கூற வேண்டும். அதையெல்லாம் மாற்றியமைத்து அனைவரும் படிக்க வேண்டும் என்று கொள்கையுடன் செயல்படுவதே திராவிட மாடல்.

நிதி கேட்கவில்லை
4 ஆண்டுகளில் ரூ.6,664 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது என்று கூறுகிறார். தமிழக அரசு உயர்கல்விக்காக ஓராண்டில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவு செய்து வருகிறது. அதில் கல்லூரி கல்விக்காக ரூ.3 கோடிக்கும் அதிகமாகவும், பொறியியல் கல்விக்காக ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளோம். அதனால் நாங்கள் நிதியுதவி கேட்கவில்லை. திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுங்கள் என்று தான் கோரினேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications