அதிமுகவை அழிக்க தவெக முயற்சி.. செங்கோட்டையன் மெகா திட்டம்.. புட்டு புட்டு வைத்த தினகரன்
திருச்சி : சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அமமுக எம்எல்ஏ தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுகவை அழிக்க தவெக முயற்சிப்பதாகவும், தங்கள் எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தினகரன் எச்சரித்துள்ளார்.
திருச்சியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தில் 2006 தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அன்றைக்கு கருணாநிதி - சோனியா காந்தி இடையே புரிதல் இருந்ததால் மைனாரிட்டி அரசாக செயல்பட முடிந்தது. தற்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது எல்லோராலும் விமர்சனம் செய்யப்படுகிறது.

அபகரித்த தவெக
தவெகவை எதிர்த்து போட்டியிட்டு தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. விசிக, கம்யூனிஸ்ட்கள் திமுக கூட்டணியில் இருந்துகொண்டு, தவெகவை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என்று சொல்லியுள்ளனர். காங்கிரஸை போல செய்திருந்தால், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக மானம் போயிருக்கும். அவர்கள் எதற்காக இந்த ஆட்சியை ஆதரித்தார்கள் என்று தெரியவில்லை. ஆட்சி அமைப்பதற்கு முன்பே அமமுக வேட்பாளரையும் அபகரித்துவிட்டனர்.
எங்கள் எம்எல்ஏ ஆக இருந்தவர் அதிமுக - அமமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர். அவரை நீங்கள் இணைத்துக் கொண்டது குதிரை பேரம் தான். அதிமுக பெயரை கூட சொல்லாமல் அவர்களை ஊழல் கட்சி என்று சொன்ன விஜய், அவர்களின் ஆதரவை ஏற்றது எப்படி. அதிமுகவை அழிக்க தவெக முயற்சிக்கிறது. அவர்களுடன் கூட்டணி வைப்பது எந்த வகையில் நியாயம். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள 25 அதிமுக எம்எல்ஏக்களும் என்னுடைய நண்பர்கள் தான்.
அதிமுகவை அழிக்க முயற்சி
அவசரப்பட்டு அவர்கள் செய்யும் முடிவு அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அரசியல் கட்சியின் தலைமை தான் சட்டமன்ற குழு தலைவரை நியமனம் செய்ய முடியும். பழனிசாமி தேர்வு செய்யும் கொறடாவுக்கு தான் அதிகாரம் உள்ளது. இதற்கு பல நீதிமன்றங்களின் தீர்ப்பு முன்னுதாரணமாக உள்ளன. அமமுக எம்எல்ஏ, அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும். சி.பி.ஐ விசாரணை கோருவோம்.
பெரும்பான்மை கிடைத்தால் தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நல்லது. இன்ஸ்டாகிராம் ரீலிலேயே ஆட்சி செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. அம்மாவின் தொண்டர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக என்கிற இயக்கத்தையும், தொண்டர்களையும் தவெக அழிக்க பார்க்கிறது. அதற்கான ஏஜென்டாக செங்கோட்டையன் செயல்படுகிறார். அவரை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது சரியான அதிமுகவை தான் அமமுக ஆதரிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications