1960-ம் ஆண்டு "அறியாமையால்" இந்தி மொழி திணிக்கப்பட்டது.. சொல்வது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: 1960-ம் ஆண்டில் அறியாமையால் இந்தி மொழி திணிக்கப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பு என்பது 1930கள் முதலே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1938-ம் ஆண்டு முதலாம் இந்தி திணிப்பு எதிர்ப்பு போரில்தான் தாளமுத்து, நடராசன் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். 1940, 1950கள் என தொடர்ந்து இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்தது. 1965-ல் நடந்தது இந்தி மொழி திணிப்பு போரின் உச்சகட்டம். அதில்தான் பல நூறு இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி வீர மரணம் அடைந்தனர். அதன்பின்னரும் தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று இந்தி தெரியாது போடா என்கிற வரை இந்த போர் தொடருகிறது. மத்திய அரசும் இந்தி மொழியை தொடர்ந்து திணித்து கொண்டே இருக்கிறது.

இப்பின்னணியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி படிப்புகளை படிக்கும் மாணவர்கள் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து கலந்துரையாடினர். தமிழ்நாடு தர்ஷன் என்ற பயணத்துக்கு இந்த மாணவர்களை தமிழ்நாட்டுக்கு வருகை தருமாறு ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த மாணவர்களுடனான உரையாடலின் போது, தமிழ்நாடு ஆன்மீக, கலாசார தலைநகராக இருக்கிறது என்றார். மேலும் இந்தியாவின் ஆன்மீக, கலாசாரம், நாகரிக பரிணாம வளர்ச்சியின் ஒருமைப்பாட்டின் வரலாற்று குறிப்புகளை விவரித்தார். காலனித்துவ சக்தி, இந்தியாவை துண்டாடுவதற்கு திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டது; மக்களைத் துண்டித்து அந்நியர்களாக்கியது என்றும் குறிப்பிட்டார்.
நாளாந்தாவுக்கு சென்று சீனாவுக்கு பவுத்த மதத்தை அறிமுகப்படுத்தியவர் மாமல்லபுரம் பல்லவ இளவரசர் என்றார் ஆளுநர் ரவி. தமிழ் மொழி, இலக்கிய செழுமையை மேற்கோள்காட்டி பேசிய ஆளுநர் ரவி, 1960-ல் அறியாமையால் இந்தி திணிக்கப்பட்டது என்றார். தமிழ் பழமையான மொழி, சமஸ்கிருத மொழி பழங்காலத்தில் தமிழுக்கு நெருக்கமாக இருந்தது. திருக்குறள் போன்ற இதிகாசங்கள் மிக ஆழமான அறிவொளியைத் தரக் கூடியவை என்பதால் அவற்றை எப்போதும் நாம் பேண வேண்டும் என்றார் ஆளுநர்.
ஆளுநர் ரவி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் தமிழ் அல்லாத மாணவர்களை ராஜ் பவனில் சந்தித்தார். 'தமிழ்நாடு தர்ஷன்’ வரும்படி இவர்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.#ஒரேபாரதம்உன்னதபாரதம்@PMOIndia @HMOIndia @EduMinOfIndia @MinOfCultureGoI @bhupro @PIB_India @ANI pic.twitter.com/6LW9GmsBvl
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) April 13, 2023
தமிழ் மொழி, இலக்கியத்தின் ஞானம் நாடு முழுவதும் பரவ வேண்டும். தமிழ் பேசாத பகுதிகளில் இருந்தும் எண்ணிலடங்கா தமிழ் அறிஞர்களை நாம் கொண்டிருக்க வேண்டும். தமிழ் அல்லாத மாணவர்களைத் தமிழ் கற்கவும், தமிழ் இலக்கியத்தின் பழமையான ஞானத்தில் மூழ்கித் திளைக்கவும் ஆளுநர் ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார்.












Click it and Unblock the Notifications