செம்ம ஜாக்பாட்! தமிழ்நாடு அரசு அதிரடி- அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் மாறுவது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்கள் விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2004-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டமான தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் உள்ளது.
இப்பங்களிப்பு பென்சன் திட்டத்தில் ஓய்வூதியம் என்பது உத்தரவதம் எதுவும் இல்லை என்பது அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு. பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள், இப்புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் அரசு ஊழியர்களின் அதிருப்தி. ஆகையால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் அரசு ஊழியர்கள்.

கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. தற்போது ஆளும் திமுக, தமது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்களிடையே வரவேற்பையும் பெற்றது.
திமுக ஆட்சி அமைந்தது முதல் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. அதேநேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் சில விளக்கங்கள் தரப்பட்டன. இதனை அரசு ஊழியர்கள் ஏற்கவில்லை.
மேலும் தமிழ்நாடு தழுவிய அளவில் சிபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தை ஒழிப்பதற்கான இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முன்னெடுத்தனர். அண்மையில் சென்னையில் பிரம்மான்டமான மாநாடும் நடத்தப்பட்டது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் இம்மாநாட்டை நடத்தி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நிதித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலகி பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications