உங்க ஆட்சில 230 மெ.டன்.. நாங்க வந்தபின் 650 மெ.டன்.. இபிஎஸ்ஸுக்கு புள்ளிவிவரத்தோடு.. மா.சு பதிலடி!
சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் ஆக்சிஜன் தேவை மொத்தமாக சரி செய்யப்பட்டு, படுக்கைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, கொரோனா பலி எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி இருந்தார். இபிஎஸ் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன் தனது பேட்டியில், தமிழகத்தில் வேக்சின் போடுவது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 18 - 45 வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ₹85.47 கோடி மதிப்பீட்டில் 26 லட்சம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டுள்ளது. மக்கள் வேக்சின் போடுவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

தடுப்பூசி
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இளம் தலைமுறையினர் வெகு ஆர்வம். 3 நாளில் 8 லட்சம் பேர் வேக்சின் போட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகள் இருப்பதாக ஐசிஎம்ஆரே தெரிவித்துள்ளது.

கொரோனா
கோவை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்க நிறைய காரணம் உள்ளது. அங்கு ஆலைகள் இயங்கி வருவதும் இதற்கு காரணம். இதனால்தான் அங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம். இன்று நான் கோவை செல்கிறேன், 2 அமைச்சர்கள் ஏற்கனவே அங்கு உள்ளனர். நாளை முதல்வரும் கோவை செல்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
சென்னையைப் போலவே வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டுவது வருந்ததக்க ஒன்று. அவரின் கட்சி நிர்வாகிகள் கூட எங்களை பாராட்டுகிறார்கள். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்., உதயகுமார், செல்லூர் ராஜு, பாஜக எம்.எல்.ஏ.க்களே தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகின்றனர்.

ஆக்சிஜன்
மே 6ம் தேதி எடப்பாடி பழனிசாமி காபந்து முதல்வராக இருக்கும் போது தமிழகத்தின் ஒருநாள் ஆக்சிஜன் கையிருப்பு மிக மோசமாக இருந்தது. அவர் முதல்வராக இருந்த போது ஆக்சிஜன் இருப்பு 230 மெ.டன் மட்டும்தான். நாங்கள் வந்த பின் அதை வேகமாக உயர்த்தி உள்ளோம். தற்போது ஒருநாள் கையிருப்பு 650 மெ.டன்.

பொளேர்
பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து இரவு பகல் பாராமல் ஆக்சிஜன் இறக்கி வருகிறோம். முந்தைய ஆட்சியில் இப்படி எதையும் செய்யவில்லை. இந்த உண்மை எல்லாம் தெரிந்தும் ஆக்சிஜன் காரணமாக மக்கள் சாகிறார்கள் என்று பொய் புகாரை சொல்வது மிக தவறு, என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications