ஊரக உள்ளாட்சி தேர்தல்.. திமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி.. அதிமுக கூட்டணியும் அபாரம்
உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், வல்லுநர்கள் யாரும் கணிக்காத அளவில் முடிவுகள் வெளியாகி வருகிறது.
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் திமுக மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய இரண்டு பதவிகளுக்குமான தேர்தலில் அதிமுக கூட்டணியைவிட அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டிலும் நேற்று மாலையில் இருந்து திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது.மொத்தம் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.
இந்த தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கிய பதவிகளிலும் திமுக கட்சிதான் முன்னிலை வகித்து வருகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்னும் முழுமையடையவில்லை.
அதன்படி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5067 இடங்களில் திமுக கூட்டணி 2338 , அதிமுக 2185, இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 272, அதிமுக 241 இடங்களில் வெற்றி பெற்றன. மொத்தத்தில் இரண்டிலும் திமுக கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது.
அமைதியாக அசத்தும் அமமுக.. அசராத அதிமுக.. விரட்டும் திமுக.. உள்ளாட்சி தேர்தலில் கலக்குவது யார்?
நேற்று இரவே நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் தூத்துக்குடி தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. முழுமையான முடிவுகள் தெரிய இன்று விடியற்காலம் ஆகும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் 22 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.