ரூ.4,100 கோடி பரிவர்த்தனைக்கு கணக்கு காட்டாத தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி.. ஐடி ரெய்டில் ஷாக்!
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் திடீரென 2 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் தான் பல்வேறு வகையான பரிவர்த்தனைகளில் மொத்தம் ரூ.4,100 கோடிக்கு கணக்கு காட்டப்படாமல் மறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் ஷாக் தகவலை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்நிலையில் தான் திடீரென்று வருமான வரித்துறையினர் அந்த வங்கியின் தூத்துக்குடி விஇ சாலையில் உள்ள தலைமையகத்தில் சோதனை நடத்தினர்.

கடந்த 27 ம் தேதி 4 கார்களில் சென்ற 16 வருமான வரித்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அதன்பிறகு மறுநாள் காலையிலும் தொடர்ந்து நடந்தது. இதையடுத்து 28 ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை முடிவுக்கு வந்தது.
இந்த சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்நிலையில் தான் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் முக்கிய விபரங்களை இன்று வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக வருமான வரித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தலைமையகத்தில் 2 நாள் சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் ரூ.110 கோடி பரிவர்த்தனை தொடர்பாக வங்கி நிர்வாகம் தகவல் அளிக்கவில்லை.
மேலும் 10,000 வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை குறித்த விபரங்களையும் அளிக்கவில்லை. மேலும் வங்கி சார்ந்த ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான விபரங்கள் கணக்கில் காட்டவில்லை. இந்த பரிவர்த்தனைகள் உள்பட மொத்தம் ரூ.4,100 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைக்கு வங்கி நிர்வாகம் கணக்கு காட்டவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications