அடுத்த 3 மணிநேரம் முக்கியம்! இடி மின்னலோடு 18 மாவட்டங்களில் பெய்யப்போகும் மழை! உங்க ஊர் இருக்கா?
சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. வேலூர், மதுரை மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் வெயில் 105 டிகிரி பாரன்ஹீட் வரை கொளுத்தியது. அக்னி வெயில் முடிந்த பின்னர் கூட வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்தது. அதேபோல பருவமழையும் சற்று தாமதமாக தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மிதமான மழை பெய்தது. சென்னையில் இயல்பை விட அதிக அளவில் மழை பொழிந்தது.

இந்நிலையில் இன்றைய நிலவரத்தை பொறுத்த அளவில் தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது. அதேபோல, அடுத்த மூன்று மணி நேரத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு (ஜூன் 22, 23, 24) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications