தமிழகத்தில் 'இந்த' காரணத்தால் 2026க்கு முன்பே சட்டசபை தேர்தல் வரலாம்.. பகீர் கிளப்பும் செல்லூர் ராஜூ
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் 2026-க்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இன்று காலை முதலே எஸ். பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடக்கும் அதிரடி ரெய்டு தான் பேசுபொருளாகியுள்ளது.
அமைச்சர் பதவியில் இருந்த போது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ் பி வேலுமணி
எஸ் பி வேலுமணி மட்டுமின்றி அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கோவையில் வடவள்ளியில் பகுதியிலுள்ள வேலுமணி உறவினர் சந்திரசேகர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிமுக தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

2026க்கு முன் தேர்தல்
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "சமீப காலங்களாக திமுகவில் இணைந்துள்ளவர் அனைவரும் கடந்த காலங்களில் முறைக்கேடாக வருமானத்திற்கு அதிகமாகப் பணம் சம்பாதித்தவர்கள் தான். இது அனைவருக்கும் தெரியும். இதனால் யாருக்குத் தெரியும், வரும் 2026ஆம் ஆண்டுக்கு முன்னரே தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் நடைபெறவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை" என்று தெரிவித்தார்.

அதிமுக கண்டம்
எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனை அதிமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஓபிஎஸ் & ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதாரம் இன்றி ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது என்றும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், பழி வாங்குவதை விட்டுவிட்டு மக்கள் பணியில் திமுக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல்
அதேபோல வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், "இந்த சோதனை அரசியல் வாங்கும் நடவடிக்கை தானே தவிர வேறு எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் எங்கள் முடக்கி வைக்கவே இது போன்ற நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்துள்ளது. ஆனால், ஒன்றை மறந்துவிட்டார்கள், இதுபோல எந்தவொரு நடவடிக்கையும் எங்களைச் சோர்வடைய வைக்காது" என்று காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications