இப்படியே போனால்.. வட இந்தியாவை விட மோசமாகி விடும்.. தமிழகத்திற்கு முழு லாக்டவுன் தேவை?
சென்னை: தமிழகத்தில் அதுவும் சென்னையில் கொரோனா பரவல் சுனாமி போல் பரவுவதாக சொல்லப்படும் நிலையில் தமிழகத்திற்கு முழு லாக்டவுன் போடப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
தமிழகத்தில் முதல் அலையில் இல்லாத அளவுக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, தாய்மார்கள் முதல் இளைஞர்கள் வரை கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு 16 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியது. அதாவது 98 பேர் மரணமடைந்தார்கள்.
பெங்களூருவில் மாயமான '3000' கொரோனா நோயாளிகள்.. "ஓடலை".. உண்மையில் நடந்தது இதுதான்!
விழிப்புணர்வு
பெரும்பாலானவர்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதே இல்லை. ஒரு மாஸ்கை கூட போலீஸ்காரர்கள் அபராதம் விதிப்பார்களே, பேருந்தில் ஏற்றமாட்டார்களே என்ற எண்ணத்தில்தான் போடுகிறார்களே தவிர கொரோனா நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கோ, மற்றவர்களிடமிருந்து நமக்கோ பரவக் கூடாது என்ற விழிப்புணர்வு துளிக் கூட இல்லை என்றே பரவலாக பேசப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள்
இதனால் தமிழகத்தில் ஒரு லாக்டவுன் நிச்சயம் வேண்டும் என்கிறார்கள். முழுசாக தமிழகத்தை இழுத்து பூட்டாவிட்டாலும் குறைந்தபட்சம் கொரோனா அதிகம் பாதித்துள்ள நகரங்களிலாவது முழு முடக்கம் வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
ஸ்டாலின்
இந்த லாக்டவுன் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் அதிமுக அரசே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் லாக்டவுன் போடுவார்கள் என்றே தெரிகிறது. ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்தால் லாக்டவுன் போடுவது கடினம்தான். ஏனெனில் திமுகவின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின், இன்னொரு லாக்டவுனை தமிழகம் தாங்கும் நிலையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி
இதனால் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு முழு ஊரடங்கு போடப்படாது என்றே தெரிகிறது. மாறாக கொரோனா அதிகம் பாதித்த நகரங்களிலாவது லாக்டவுன் போடப்படும் என தெரிகிறது. லாக்டவுனும் தடுப்பூசியுமே கொரோனாவை அழிக்கும் மிகப் பெரிய சக்திகள்.
எந்தெந்த இடங்கள்
ஒரு வேளை தமிழகத்தில் லாக்டவுன் அமல்படுத்த அரசு முடிவு செய்தால் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு முழு லாக்டவுன் போடப்படலாம் என தெரிகிறது. 5 பேரில் ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.