நீட் தேர்வு கெடுபிடிகள்! தமிழக அதிகாரிகள்தான் மாணவர்களை துன்புறுத்துகிறார்கள்- தமிழிசை விமர்சனம்
சென்னை: நீட் தேர்வின் போது மாணவர்களை உதாசீனப்படுத்தி, துன்புறுத்துவது இங்குள்ள அதிகாரிகள்தான் என்றும் வேண்டுமென்றே நீட் தேர்வின் புனிதத்தன்மையை கெடுக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு சோதனை என்பது காப்பி அடித்து அதன் மூலம் நன்றாக படிக்கும் மாணவர்களின் சீட்டுகள் தவறான செயல்களால் பறி போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்களை உதாசீனம்
ஆனால் மாணவர்கள் இப்படி உதாசீனப்படுத்தப்பட கூடாது. துன்புறுத்தப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. இதில் யார் தவறு செய்கிறார்கள் என்றால் இங்கே உள்ள அதிகாரிகள், பரீட்சையை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தவறு செய்கிறார்கள்.
உயர்ந்த தேர்வு
வேண்டுமென்றே ஒரு உயர்ந்த பரீட்சையை இப்படிப்பட்ட சில நடவடிக்கைகளின் மூலம் அதன் புனிதத்தன்மையை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சில பேர் இப்படி நடந்து கொள்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டாகிவிட்டது. அதன்பேரில்தான் வருகிறார்கள்.
துன்புறுத்தும் அதிகாரிகள்
இது போல் மாணவர்களை துன்புறுத்தும் உதாசீனப்படுத்தும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். உடனே நீட் தேர்வே குறை என சொல்ல முடியாது. ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியது திமுகவின் தோல்வி என நான் சொல்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்து 5ஆவது முறையாக தமிழக மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
நீட் மீது தவறில்லை
எனவே நீட் மீது தவறில்லை. வேண்டுமென்றே அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இங்குள்ள அதிகாரிகள் இதை செய்கிறார்கள். திருப்பூரில் சட்டை பட்டனை கழற்றிவிட்டு வேறு சட்டை போட்டுக் கொண்டு தேர்வு எழுத வேண்டும் என நீட் தேர்வில் யாரும் அப்படி சொல்லவில்லை.
தவறான எண்ணம்
ஒரு கருத்தை சொன்னால், அதற்கு ஒரு தவறான நடைமுறையை ஏற்படுத்தி நீட் மீதே தவறான எண்ணத்தை கொண்டு வருகிறார்கள். இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
13 மொழிகளில் தேர்வு
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி என 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
எத்தனை மாணவர்கள்
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு எழுதுவதற்காக 22லட்சத்து 70 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். அதன்படி 5,543 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தேர்வில் 20 லட்சத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
கட்டுப்பாடுகள் என்ன
முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியக்கூடாது, தலைமுடியில் ஜடைப்பின்னல் போடக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மாணவ, மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நீட் தேர்வு
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு வந்த திருப்பூர் மாணவியின் சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பெண் போலீஸ் ஒருவர் அந்த பெண்ணுக்கு வேறு சுடிதார் வாங்கிக் கொடுத்து உதவினார். இவரை அனைவரும் பாராட்டினர்.
ஹிஜாப் கழற்றி விட்டு தேர்வுக்கு அனுமதி
ஊட்டி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்களிடம் ஹிஜாபை கழற்றிவிட்டு தேர்வு எழுத அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் தேர்வு மையத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications