போன டிசம்பர்ல வந்த பழசே இன்னும் போகலை!.. இதுல இந்த டிசம்பர்ல புதுசு வேறயாம்.. மக்களே உஷார்!
சென்னை: பிரிட்டனில் கொரோனாவின் புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக மக்கள் அரசு சொல்லும் வரை காத்திருக்காமல் தாங்களாகவே முன் வந்து கூட்டமாக கூடுவதை தவிர்க்கலாம்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் இன்னும் என்ட் கார்டு இல்லாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நிலையில் கடந்த 7 அல்லது 8 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இயல்பு நிலை
இதனால் இந்திய பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்றது. பலர் வேலையை இழந்துவிட்டார்கள். இந்தியாவே முடங்கியதால் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பாதிக்கப்பட்டனர். கடந்த 2 அல்லது 3 மாதங்களாக மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியது.
புத்தாண்டு
இந்த நிலையில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்டவை பண்டிகைகள் வரிசையாக வருகின்றன. இதனால் மக்கள் ஒன்று கூடி கொரோனா பரவும் நிலை ஏற்படும் என்பதால் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேரத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்கள்
மேலும் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது தற்போது இருக்கும் வைரஸை காட்டிலும் 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்போது பிரிட்டனில் இருந்து டெல்லி, சென்னை வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது புது வகை கொரோனாவா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தடை விதிப்பு
தமிழகத்தை பொருத்தவரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. என்னதான் தமிழகத்தில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் தேவையில்லாமல் பிற இடங்களில் கூடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.
மாஸ்க் அணிதல்
மற்ற மாநிலங்களை போல 144 தடை உத்தரவு பிறப்பிக்க வழி வகை செய்யாமலும் அரசு சொல்லும் வரை காத்திருக்காமல் தமிழக மக்களும் கூட தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்கலாம், கூட்டமாக போவதையும் தவிர்த்து விடலாம். அதுவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அரசு நம் நலனுக்காக சொல்கிறது என்பது கருத்தில் கொண்டு நம் குடும்பம், உற்றார், உறவினரின் நலனுக்காக சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது, மாஸ்க் அணிவது ஆகியவற்றை செய்யலாம்.