பானி பூரி, கட்டிட வேலை.. தமிழகத்தில் குவிந்துள்ள வட மாநிலத்தவர்கள் லிஸ்டை கையில் எடுக்கிறது காவல்துறை
சென்னை: தமிழகத்தில் வடமாநிலத்தவர் தொடர்புடைய குற்ற செயல்கள் அதிகரித்து வருவது பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது; ஆகையால் தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநிலத்தவர் குறித்த விவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்தியர்கள் வட இந்தியாவுக்கு செல்வது கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் வட இந்தியர்கள், தென்னிந்திய மாநிலங்களில் குடியேறுவது கிடுகிடுவென அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
உதாரணமாக 2001இல் தென்னிந்தியாவில் வட இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 58.2 லட்சம். ஆனால் 2011-ம் ஆண்டு தென்னிந்தியாவில் வசித்த வட இந்தியர்கள் எண்ணிக்கை 77.5 லட்சமானது. இப்போது இந்த எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டும். தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட வட இந்தியர்கள் நடமாட்டத்தை பார்க்க முடியும்.

வட இந்தியர்களும் இந்தியும்
தமிழகத்தில் வட இந்தியர்கள் நடமாட்டம் இருப்பதால் சில பகுதிகளில் இந்தி முதன்மை மொழியாக உருமாறும் நிலைமையும் உருவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பேருந்தில் இந்தி மொழியை பயன்படுத்துகிற நிலைமை; திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலை உணவகத்துக்கு பெயரே இந்தியில் மட்டுமே இருக்கிற நிலைமை என உருமாற்றம் நிகழ்கிறது.

வட இந்தியர்களுக்கு எதிர்ப்பு
இன்னொரு பக்கம், வடமாநிலத்தவர் தொடர்புடைய குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே பெருநிறுவனங்கள், பெருந்தொழில்கள் வடமாநிலத்தவர் வசமாகி இருக்கின்றன. இதனால் தமிழகத்தில் வடமாநிலத்தவர் குடியேற்றத்துக்கு எதிரான குரல்கள் வலுவடைந்து வருகின்றன. அண்மையில் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கோரி திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியது. வடகிழக்கு மாநிலங்களில் பிறமாநிலத்தவர் நுழைய இன்னர்லைன் பெர்மிட் எனும் முறை அமலில் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் வடமாநிலத்தவர் உள்ளே நுழைய இன்னர்லைன் பெர்மிட்டை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரம் படுகொலை
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து படுகொலை செய்யபட்டார். இச்சம்பவத்தில் அப்பகுதி இறால் பண்ணையில் பணிபுரிந்த வடமாநிலத்தவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ராமேஸ்வரம் பகுதியில் பணிபுரியும் வடமாநிலத்தவர் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என ராமேஸ்வரம் நகராட்சி நடவடிக்கை எடுத்தது.

வட இந்தியர் விவரம் சேகரிப்பு
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள வடமாநிலத்தவரை பதிவு செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் அத்தனை வடமாநிலத்தவரும் தங்களை பதிவு செய்தாக வேண்டும் என போலீசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications