கேரளாவின் சேட்டை.. தமிழக கிராமங்களை கபளீகரம் செய்ய புது சர்வே... முதல்வர் ஸ்டாலின் உடனே தலையிடுவாரா?
சென்னை: தமிழ்நாடு- கேரளா எல்லையில் உள்ள தமிழக கிராமங்களில் கேரளா அரசு அத்துமீறி டிஜிட்டல் சர்வே மேற்கொண்டு வருகிறது; இது தமிழக கிராமங்களை தங்களுடையது என உரிமை கோருகிற கேரளாவின் முயற்சி என்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு - கேரளம் ஆகியவற்றின் எல்லை நெடுகிலும் இருக்கும் கிராமங்களில் கணினி முறையில் மறு சர்வே செய்யும் திட்டத்தைக் கேரள அரசு நவம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. 1956ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினையின் போது இரு மாநிலங்களுக்கும் இடையேயுள்ள எல்லைப் பகுதியில் 230 கி.மீ. தூரம் அளவுக்கே இரு மாநிலங்களின் கூட்டு சர்வே முயற்சியால் அளவிடப்பட்டுள்ளன.
ஆனால், மீதம் இருக்கக்கூடிய 627 கி.மீ. அளவுக்குக் கூட்டு சர்வே நடத்துவதற்குக் கேரள அரசு ஒத்துழைக்காததினால் அந்த வேலை கடந்த 56 ஆண்டுக் காலமாக அப்படியே கிடக்கிறது. இரு மாநிலங்களின் பெரும்பகுதியின் எல்லை வரையறுக்கப்படாமல் உள்ளது. ஆனால், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் கேரளம் இந்த முயற்சியில் ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.

கேரளா ஆதிக்கம்
கடந்த 56 ஆண்டுக் காலத்தில் எல்லைப் பகுதியில் இருக்கக்கூடிய தமிழக கிராமங்களில் அத்துமீறி உள்புகுந்து பல பகுதிகளை மலையாளிகள் ஆக்கிரமித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் தாலுக்காவில் ஏறத்தாழ 30,000 ஏக்கர் கொண்ட காட்டுப் பகுதியில் மலையாளிகள் உள்புகுந்து காடுகளையும் வெட்டி, மரங்களைத் திருடிக் கொண்டு சென்றதோடு, அப்பகுதியில் ஏராளமாகக் குடியேறிவிட்டனர். இதன் விளைவாகக் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் மலையாளிகள் பெரும்பான்மையினராகி அவர்களில் ஒருவரே தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி வருகின்றனர்.

எல்லையில் ஊடுருவும் மலையாளிகள்
இதைப்போல குமரி, நெல்லை, விருதுநகர், தேனி மாவட்டம் முதல் கோவை மாவட்டம் வரை இரு மாநில எல்லை நெடுகிலும் மலையாளிகள் ஊடுருவி காட்டு நிலங்களில் குடியேறி வருவது தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு ஆக்கிரமித்தப் பகுதிகளை தனக்குச் சொந்தமானது என்று காட்டுவதற்கே புதிய சர்வேயை கேரள அரசு நடத்துகிறது. உடனடியாக இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு இதை நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் நமக்குச் சொந்தமான ஏராளமான நிலப்பகுதிகளை நாம் இழக்க வேண்டிவரும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

தமிழக நிலத்தை வளைக்க முயற்சி
இதேபோல் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது: தமிழக கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக நிலங்களை தங்களின் வருவாய் நிலங்கள் என ஆக்கிரமித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பல நிலங்களில் வலுக்கட்டாயமாக, 'இது கேரள மாநிலத்திற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையை வைத்து செல்வது நில ஆக்கிரமிப்பின் உச்சக்கட்டம். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி வளைத்து போட முயற்சி செய்வதை தமிழக அரசு கண்டிக்காமல் அமைதி காப்பது முறையல்ல.

கேரளா கம்யூனிஸ்ட் அரசின் துரோகம்
இது குறித்து நேற்று .தமிழக வருவாய் துறை அமைச்சர் , விரைவில் இரு மாநில அரசுகளும் இணைந்து மறு ஆய்வு நடத்தும் என்றும் கூறியுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது.'வரும் முன் காப்போம்' என்றவர்கள் 'போன பின் பார்ப்போம்' என்று அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. உடனடியாக தமிழக எல்லையில் அத்து மீறி செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து, மறு ஆய்வு பணியினை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. கம்யூனிஸ்டுகளுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த திமுக இப்போதாவது விழித்து கொண்டு தமிழர்களுக்கு கேரள கம்யூனிஸ்ட் அரசு செய்யும் துரோகத்தை தட்டி கேட்க வேண்டும். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications