14 பிளாஸ்டிக்குடன் வரும் லாரிகளுக்கு இனி தடை.. தமிழக அரசு அதிரடி!
Recommended Video
சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுடன் வரும் லாரிகளை தமிழகத்துக்கு நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்படும் என தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயற்கையை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை விற்பதற்கோ இருப்பு வைப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
14 பொருட்கள்
அந்த வகையில் உணவுப் பொட்டலங்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள், டைனிங் டேபிள் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தெர்மகோல் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் பிளேட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட குவளைகள் கப், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் கேரி பேகுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட கேரி பேகுகள், நெய்யப்படாத பேக்குகள், வாட்டர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் ஸ்டிரா, பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் பைகள் ஆகிய 14 பொருட்களாகும்.
விவரங்கள்
இவற்றுக்கு தடை விதித்த தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் இவற்றை கொண்டு வரும் லாரிகளும் இனி தமிழகத்தில் நுழைய தடை விதிக்கப்படும் என கூறியுள்ளது. அதன்படி வணிக வரி துறை மற்றும் விற்பனை வரித் துறையுடன் இணைந்து மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரும் லாரிகள் குறித்த விவரங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
சமர்ப்பிக்க
இதுகுறித்து தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில் நாங்கள் விற்பனை வரித் துறையுடன் ஒரு மாதத்துக்கு மேலாக இணைந்து பணியாற்றி வருகிறோம். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை பிற இடங்களுக்கு ஏற்றி அனுப்பும் போது ரசீதுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
சீல் வைக்கப்படும்
அதன் படி மேற்கண்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுடன் வரும் லாரிகளை தமிழகத்துக்குள் வர விடாமல் தடை செய்வோம். ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் மற்ற மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும்.
60 சதவீத பிரச்சினை
பின்னர் லாரிகளுக்கும் தடை விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மகாராஷ்டிரம், ஆந்திரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை தடுத்து நிறுத்தினாலே 60 சதவீத பிரச்சினை தீர்க்கப்படும்.
பறக்கும் படை
தமிழகம் முழுவதும் 1400 பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். மொத்தம் 8 சோதனை சாவடிகள் வழியாக பிளாஸ்டிக் பொருட்களுடன் வரும் லாரிகள் அங்கேயே தடுத்து நிறுத்தப்படும். இதுமட்டுமல்லாமல் இந்த லாரிகள் தமிழகத்துக்கு நுழைய விடாமல் தடுக்க பறக்கும் படையினரும் அமைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.