தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்த முதியவர்களிடம் ரூ.4 கோடி மோசடி: ஊழியர் மீது குண்டர் சட்டம்
சென்னை: தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்த முதியோர்களிடம் இருந்து பொய்யான வைப்பு நிதி கணக்கு மூலம் ரூ.4 கோடி மோசடி செய்த தனியார் வங்கி முன்னாள் ஊழியர் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் ஹரிகுமார் பல்வேறு முதியவர்களுக்கு பொய்யான வைப்பு நிதி கணக்கு தொடங்கி கொடுத்து பல கோடிகளை மோசடி செய்தது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. அதோடு தனது மோசடி திட்டத்திற்காக பல பிரபல நிறுவனங்களின் பெயரில் இவர் பொய்யான வங்கி கணக்கு தொடங்கியதும் அம்பலம் ஆகியுள்ளது.

இது தொடர்பாக காவல் ஆய்வாளர் வெ.ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள Standard Chartered வங்கி வாடிக்கையாளர்களுக்கு டிமேட் கணக்கு துவங்க நியமிக்கப்பட்டிருந்த Standard Chartered Securities என்ற தனியார் நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் ஊழியர் D.ஹரிகுமார் என்பவர் அவ்வங்கியை விட்டு நீக்கிய பின்பும் தொடர்ந்து அவ்வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த முதியோரிடம் வங்கி ஊழியர் போல் செயல்பட்டு நம்பிக்கை ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களை ஏமாற்றி உள்ளார்.
அவர்கள் பாடுபட்டு சேர்த்த ஒய்வு ஊதியம் மற்றும் சேமிப்பு பணத்தை Shriram Chits, J.K. Tyres, DHFL போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற்றுத் தருவதாகவும், அதற்கு தாம் உதவுவதாகவும் கூறி அவர்களின் காசோலைகளை பெற்று உள்ளார் அவராகவே Shriram Associates, JK Associates, DHL போன்ற போலியான பெயர்களில் விருகம்பாக்கத்தில் உள்ள Axis வங்கியில் கணக்கு தொடங்கி அதன்மூலம் போலி நிரந்தர வைப்புத் தொகை ரசீதுகளை அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

அவ்வாறு நிரந்தர வைப்புத் தொகை கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய முதிர்வு தொகை திரும்ப கேட்கும் போது, அவர்களிடம் மேலும் இரண்டு வருடங்களுக்கு வைப்புத் தொகையை புதுப்பிக்குமாறு D.ஹரிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வாடிக்கையாளர்களின் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து சுயலாபம் அடைந்த D.ஹரிகுமாரால் சொன்னபடி முதிர்வு தொகையை திரும்ப கொடுக்க முடியவில்லை. இப்படி பணத்தை திருப்பி கொடுக்காமல் சுமார் 10த்திற்கு மேற்பட்ட முதியோரை ஏமாற்றியுள்ளார்.
இது சம்மந்தமாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, D.ஹரிகுமாரை போலீஸ் கைது செய்தது. நீதிமன்ற உத்தரவுப்படி இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில், ஹரிகுமார் இதுபோன்று மேலும் பலரிடம் ரூ.4 கோடி வரை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் இவ்வழக்கில் ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட போலி நிரந்தர வைப்புத் தொகை ரசீதுகள், Shriram Fixed Deposits முத்திரைகள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
ஹரிகுமார் இதேபோன்று தொடர்ந்து மோசடி செயலில் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றக் கூடும் என்பதால் அவரை தடுப்பு காவலில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜுவால் உத்தரவிட்டதின் பேரில் இன்று 24.08.2021 ம் தேதி குண்டர் தடுப்புச் சட்ட காவலில் அடைக்கப்பட்டார், என்று செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications