அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்!
சென்னை: அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு குளிரான இரவுகளே வடதமிழக உள்மாவட்டங்களில் இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு கொட்டித் தீர்த்துவிட்டது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
இந்த டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும். மார்கழி மாதம் என்றாலும் நெருக்கமாக வீடுகள் இருக்கும் பகுதிகளிலும் கடுங்குளிர் நிலவி வருகிறது.
குளிர் வாட்டி எடுக்கிறது
வீட்டில் ஃபேன் கூட ஓட விட முடியாமல் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் சளி, தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அவதியடைகிறார்கள். இந்த குளிருக்கு கோடைக் காலமே தேவலை என்று சொல்லும் அளவுக்கு மோசமான குளிர் இருக்கிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு உள்ளது.
குளிர்
வாகனங்கள், பூக்கள், கொடி, மரங்கள் மீது பனிக்கட்டிகள் படர்ந்துள்ளன. ஏற்கெனவே குளிரால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பனிக் கட்டியால் கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடுங்குளிர் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வட உள்மாவட்டங்களில் குளிர் இரவுகள் தொடரும்.
19 முதல் 21 டிகிரி
சென்னை மற்றும் தமிழக கடலோரத்தில் டிசம்ப்ர் 31, ஜனவரி 1 அல்லது 2 தேதிகளில் மழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலையில் 19 முதல் 21 ஆக இருக்கும். கிழக்கு காற்று வீசும். மேக கூட்டங்களும் அதிகரிக்கும். இதனால் இரவு நேரத்தில் குளிர் அதிகமாகும். வளி மண்டலத்தில் இருந்து வெப்பம் வெளியேறவிடாமல் மேகங்கள் மறைத்துக் கொள்ளும் என்றார்.
நெட்டிசன்கள்
வேலூரில் கடுங்குளிர் நிலவுகிறது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்கள். கோடைக்காலமோ மழை காலமோ வேலூரில் எல்லாமே அதிகம்தான் என்கிறார்கள். ஓசூரிலும் அதிக பனி மூட்டம் இருப்பதாக கூறுகிறார்கள். தருமபுரி, நாமக்கல்லில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.