சென்னையில் இனி மழை படிப்படியாக குறையும்.. டிசம்பரில் மேலும் ஒரு காற்றழுத்தம் வரும்..வெதர்மேன்
சென்னை: சென்னைக்கு இனி படிப்படியாக மழை குறைந்துவிடும். ஆனால் காற்று நன்றாக வீசும். டிசம்பரில் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் நிவர் புயலானது இன்னும் சற்று நேரத்தில் புதுச்சேரி அருகே மரக்காணம்- கல்பாக்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அது கரையை கடந்தவுடன் வட மேற்கு திசையில் உள்ளே நகர்ந்து திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை காலை நல்ல மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழை
சென்னையை பொருத்தவரை மழை விட்டு விட்டு பெய்து காற்று வீசிவருகிறது. கடந்த 3 தினங்களில் தமிழகத்தில் சென்னையில்தான் அதிக மழைப் பொழிவு இருந்தது. சராசரியாக 850 மி.மீ. பெய்ய வேண்டும். நாளை காலை வரை வடகிழக்கு பருவமழையின் சராசரி மழை அளவு சென்னைக்கு கிடைத்துவிடும்.
அடர்த்தியான மேகங்கள்
புயலோட மையப்பகுதியின் அடர்த்தியான மேகங்கள் கடலூர், சிதம்பரம், புதுவை ஆகியவற்றில் விழுகிறது. இதனால் இந்த பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை டெல்டா மாவட்டங்களுக்கு கிடைக்கவில்லை. ஆட்கள் இல்லாத ஒரு நேரத்தில் புயல் கரையை கடப்பதாலும் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்வதாலும் மற்ற புயல்களுடன் ஒப்பிட்டுவிட்டு விட முடியாது.
புதுக்கோட்டை
எதிர்பார்த்த அளவுக்கு இது தீவிரமடையாவிட்டாலும் கிட்டதட்ட கஜா புயல் அளவுக்கு காற்றின் வேகம் இருக்கிறது. இந்த நிவர் சீக்கிரமாகவே வலுவிழந்துவிடுகிறது. ஆனால் கஜா அப்படியில்லை திண்டுக்கல் போகும் வரை புயலாகவே இருந்தது. புதுக்கோட்டையிலும் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
செங்கல்பட்டு
இந்த நிவர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செல்லும் போது கிட்டதட்ட 80 முதல் 90 கி.மீ. தூரத்தில் வீசும். இந்த புயல் கரையை கடந்தவுடன் புயலின் தென்கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடும். காலையில் சென்னையில் அதிக காற்று வீசும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் விட்டுவிட்டு சூறாவளி காற்று வீசும்.
வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்
எனவே மதியம் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். சென்னையில் இனி மழையின் தாக்கம் படிப்படியாக குறையும். உள்மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரத்தில் இன்று நல்ல மழை பெய்யும். புயல் வந்தாதான் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மழை கிடைக்கும். இந்த முறையும் நல்ல மழையும் பெய்யும்.
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி குறித்து அஞ்சாதீர்கள். ஏரிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்துவிடும். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் மழை இருக்காது. தருமபுரி, சேலம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த காற்றழுத்த பகுதி டிசம்பர் முதல் வாரத்தில் வருகிறது.
டிசம்பரில் காற்றழுத்தம்
டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அங்கு சேதமில்லாத நல்ல மழை கிடைக்க வேண்டும். இந்த புயல் போனதும் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெரியவரும். அது காற்றழுத்த தாழவு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. எனவே வடதமிழகத்திற்கு இல்லாமல் உள் மாவட்டங்களுக்கு மழை கிடைக்க வேண்டும் என நம்புவோம்.